இலங்கையில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி பல பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி சமர்ப்பித்துள்ள சிபாரிசுகளாவன.
* மணமகளின் சம்மதம் மற்றும் மணமகளின் கையொப்பம் என்பன திருமண சான்றிதழில் சேர்க்கப்பட வேண்டும்.
* முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12லிருந்து 16 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
* மனைவியினால் கோரப்படும் "பஸஹ்" விவாகரத்துக்கான காரணங்களில் பொருத்தமின்மை போன்ற காரணங்களும் உள்ளடக்கப்படவேண்டும்.
* திருமண ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட வேண்டும். தலாக் இதப்லிஸ் அதாவது விவாகரத்தின் பின் தமது உரிமைகளைக் கையளித்தல் போன்ற விடயங்களை விவாக ஒப்பந்தத்திலேயே இரு சாராரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது தென், தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு கலாநிதி சஹாப்தீன் தலைமையிலான குழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
* பலதார மணத்திற்கான உரிமைகள் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
* கணவன் மூலமாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் விவகாரத்திற்கு (தலாக்) விதிமுறைகள், மட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் (காரணங்கள் எதுவுமின்றி விவாகரத்து வழங்குதல் என்பன)
* திருமணம் ஒன்று பதிவு செய்யப்படும் போது அத்திருமணம் சம்பந்தப்பட்டவர்களின் முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமணம் என்பது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடுவதற்காக கட்டம் ஒன்று திருமணப் பதிவேட்டில் உள்ளடக்கப்பட வேண்டும்.
* ஒரு பெண் தனது மஹரை பணரீதியான பெறுமதியில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் எவ்வித நிபந்தனைகளுமற்ற குலா விவாகரத்து பெறும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
* தாம் விரும்பும் மத்ஹபில் இருப்பதற்கான உரிமை சகலருக்கும் உண்டு என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். (ஷாபி, மாலிகி,ஹம்பலி,ஹனபி)
* பராமரிப்பு செலவு பெற்றுக் கொள்ளும் உரிமை விவாகரத்தால் பாதிக்கப்பட்ட மனைவி பிள்ளைகளுக்கான பராமரிப்பு வழங்குவதை வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைக்கால மற்றும் கடந்த கால பராமரிப்பையும் உள்ளடக்க வேண்டும்.
* கைக்கூலி, மீட்பு தொடர்பான சரியான நடைமுறை காணப்படவேண்டும்.
* பஸஹ் மற்றும் தலாக்கிற்கும் மதாஹ் வழங்கப்பட வேண்டும்.
* காதி நீதிபதிகளின் நியமனம் அவர்களது தகைமை, சம்பளம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
* பெண்கள் காதி நீதிபதிகளாக, நியாயசகாய அங்கத்தவர்களாக, உபதேச சபை அங்கத்தவர்களாக நியமிக்கப்படுவது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப் பட்டுள்ள குழு நீதியமைச்சரிடம் சமர்ப் பிப் பதற்காக தனது இறுதி அறிக்கையைத் தயாரித்து வருகிறது. இந்த இறுதியறிக்கை யில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை உள்ளடக் குமாறு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
-Vidivelli
0 Comments