“சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.“ (1 கொரிந்தியர்: 1:18)
கிறிஸ்தவத்தின் அடையாளச் சின்னமாக சிலுவை விளங்குகிறது. இந்த அடையாளத்தை நாம் ஆங்காங்கே அடிக்கடிப் பார்க்கும் விதமாக வைப்பது நல்லது. அது அடிக்கடிப் பார்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பாவம் என்பது எவ்வளவு பயங்கரமான ஒன்று என்பதை அது ஞாபகப்படுத்துகிறது. பாவத்தில் இருந்து மனிதனை மீட்க இயேசு எவ்வளவு பெரிய விலை செலுத்தவேண்டியிருந்தது என்பதை அது நமக்கு நினைவுபடுத்துகின்றது. அதனைப் பார்க்கும் போதெல்லாம் மிகக்கொடிய தண்டனையாகிய சிலுவை மரணத்தின் மூலம் என்னுடைய பாவங்களில் இருந்து நான் மீட்கப்பட உதவி செய்தீரே என்று கர்த்தரைத் துதிக்கலாம். ஆனால் இந்த விதமான உணர்வுகளோடு சிலுவையை பார்க்கின்றவர்கள் எத்தனைபேர் என்று கேட்க வேண்டியுள்ளது.
பல ஆலயங்களில் சிலுவை அடையாளம் என்பது இங்கே ஒரு கிறிஸ்தவ ஆலயம் இருக்கிறது என்பதை பிறருக்கு அடையாளங்காட்டவே பயன்படுகிறது. பலர் அந்த அடையாளத்தை நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று அடையாளங்காட்டவே உபயோகிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அணிகின்ற ஆபரணங்களிலும் இந்த அடையாளம் இடம் பெற்று இதனை அணிந்திருக்கிறவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்கின்றது. சிலுவை ஆசிர்வாதச் சின்னமாக மாற்றப்பட்டது. எனவே இந்தச் சிலுவையின் அடையாளம் இணைகின்ற இடங்களில் ஆசிர்வாதங்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிலுவையை நெற்றியில் குறித்தல், வீட்டு சுவர்களிலோ, கதவுகளிலோ வரைந்து போடுதல், சிலுவை அடையாளம் பொறித்த பொருட்களை உபயோகித்தல் போன்றவையெல்லாம் கிறிஸ்தவ ஐதீகங்களாக மாறிவிட்டன. எப்படியோ சிலுவை மிக மிக விரும்பப்படத்தக்க அடையாளம் ஆகிவிட்டது. ஆனால் சிலுவையின் உண்மையான அர்த்தங்கள் மறக்கப்பட்டுவிட்டன. சிலுவை அடையாளங்களை நம்மோடு வைத்திருப்பதாலும், சிலுவை அடையாளங்களை நாம் உபயோகிக்கும் பொருட்களில் பொறிப்பதாலும் ஆசீர்வாதம் வரும் என்ற ஐதீக சிந்தனை மாற வேண்டும்.
சிலுவையை அல்ல சிலுவையில் நமக்காக அறையப்பட்ட இயேசுவின் ஐக்கியத்தை நம்மிடம் காண எப்போதும் ஆசைகொள்ளவேண்டும். இயேசு மரித்த சிலுவை அல்ல. உயிரோடு எழுந்த இயேசு நம்மோடிருக்க வேண்டும். சிலுவை மூலமாக இயேசு நமக்காக உருவாக்கின இரட்சிப்பின் அனுபவம் நம்மோடு இருக்க வேண்டும். நமக்குத் தேவை சிலுவையின் அடையாளம் அல்ல. சிலுவையின் மூலமாக நமக்காக ஆயத்தமாக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு என்ற அடையாளமே அவசியம். சிலுவையைப் பார்ப்போம் ஆசிர்வாதத்திற்காக அல்ல ஆசிர்வாதம் உருவான வழியை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதற்காக.
0 Comments