காதலின் காரணமாக மெழுகாக உருகி வாழ்க்கையைத் தொலைப்பது பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தான்.
ஒரு பெண்ணை உயிரை விட மேலாக நேசித்து, அதன் காரணமாக வாழ்க்கை முழுவதும் வாடிய ஓர் உன்னதக் காதலனின் வாழ்க்கைக்குள் போய் வருவோமா?
ஆபிரகாம் லிங்கன்!
உலக வரலாறு கண்ட மாமனிதர்களில் ஒருவர். மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சுய முயற்சியால் கல்வியறிவு பெற்று, அரசியல் உலகில் கால் பதித்து, போராடி வெற்றி கண்டு, அதிபராக உயர்ந்து, சரித்திரத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர்.
அமெரிக்காவில் பல காலம் நிலவி வந்த அடிமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, அதனால் மூண்ட பெரும் உள்நாட்டுப் போரை அடக்கி, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டியவர்.
உறுதியும் கொள்கைப் பிடிப்பும் தளராத தன்னம்பிக்கை-யும் போராடும் குணமும் கொண்ட கடுமையான மனிதர் என்று உருவகப்படுத்தப்பட்ட லிங்கனுக்கும் ஒரு மென்மையான மறுபக்கம் இருந்தது.
அரசியல் உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இளைஞர் லிங்கன் போராடிக் கொண்டிருந்த காலம் அது!
சாதித்துக் காட்டவேண்டும் என்ற ஒருமுகப்பட்ட உணர்வுடன் உழைத்துக் கொண்டிருந்த லிங்கனின் மனதில் அழகியதொரு சலனத்தை ஏற்படுத்தினாள் ஓர் இளம் பெண்.
அவள்..
ஆன் மேய்ஸ் ரட்லெட்ஜ். சுருக்கமாக ஆன்!
1813-ம் ஆண்டு, ஜனவரி மாதம் ஏழாம் நாள் அவள் பிறந்தபோது அவள் தந்தை, மகளுடைய அழகிய கண்களைப் பார்த்து, ''ஏய்.. என் நீலக் கண்ணழகி..'' என்று பெருமை பொங்க அழைத்தார்.
அவளுடைய தந்தை அப்போது நியூ சலேம் நகரில் விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஊரில் அப்போது பள்ளிக்குச் சென்று படித்த பெண்களே கிடையாது. நியூ சலேம் நகரின் அந்த அவலத்தை மாற்ற எண்ணம் கொண்டார் ஆனின் தந்தை. தன்னுடைய பிரிய மகளை பள்ளிக்கு அனுப்பி னார்.
ஆனும் பள்ளிக்குச் சென்று வந்த நேரம் தவிர, மீதி நேரத்தில் தந்தை நடத்தி வந்த பயணியர் விடுதியை நிர்வகிப்பதில் உதவி புரிந்து வந்தாள்.
கம்பளிப்பூச்சியை அழகிய பட்டாம்பூச்சியாகக் காலம் உருமாற்றுவது போல, பயணியர் விடுதி நடத்தும் ஒரு சாதாரண மனிதரின் சாதாரண பெண்ணான ஆனையும் புத்திசாலியான, அழகிய, இளம் பெண்ணாக மாற்றியது காலம்.
பொன்னிறக் கூந்தல், அழகு நீலக் கண்கள், சிரித்த முகம், நட்பான பார்வையுடன் பார்ப்பவரை வசீகரிக்கும் தோற்றம். அவள் ஒரு சிறந்த மாணவியாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல பெண்ணாகவும் மற்றவர்களால் பாராட்டப் பட்டாள்.
அப்போது நகருக்குப் புதிதாக வந்து சேர்ந்தார் லிங்கன். சில காலம் ஆனின் தந்தை நடத்திய விடுதியில் உணவருந்தினார். லிங்கனுக்கும் ஆனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது அங்கேதான்.
லிங்கனின் புத்திசாலித்தனம், உள்ளூற இருந்த போராட்ட குணம், புன்னகை மாறாத முகம், யாரையும் புண்படுத்தாத பேச்சு.. எல்லாமே அந்த நீலக் கண்ணழகியைக் கவர்ந்தன. பாடங்களில் சந்தேகம் என்றொரு சாக்கை ஏற்படுத்திக் கொண்டு லிங்கனுடனான சந்திப்புகளை அதிகப்படுத்தினாள்.
(ஆன் ரட்லெட்ஜும் லிங்கனும் சேர்ந்து படித்த ஆங்கில இலக்கண நூல் ஒன்று, அட்டையில் ஆனின் கையெழுத்துடன், அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.)
அவளது உள்ளத்தில் அவர் மீது காதலெனும் புஷ்பம் மொட்டு விடும் முன்பே அவர் இதயத்தில் அந்தப் பூ முழுமையாக மலர்ந்து விட்டிருந்தது. அதனால் தன் மேல் படரத் துடித்த அந்தத் தளிர்க்கொடியின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து கொண்டார் லிங்கன். தனது காதலை அந்த நீலக் கண்ணழகியிடம் ஓர் ஆண்மகனாக, கம்பீரமாக ஒரு நாள் எடுத்துரைத்தார்.
லிங்கனின் நேர்மையான அணுகுமுறை ஆன் ரட்லெட்ஜை அந்தக் கணமே தணலில் இட்ட மெழுகாக உருக்கி விட்டது. அவரின் உண்மைக் காதலை ஏற்றாள்.
காதல் அந்தப் பறவைகளுக்கு சுகமானதோர் புது அனுபவமாக இருந்தது. இளம் காதலர்கள், தங்களின் தனி உலகில் சிறகடித்துப் பறந்தனர்.
லிங்கன் சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற பின், இரு மனங்கள் இணையும் திருமண விழாவை ஊர் உலகை சாட்சியாக வைத்து நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.
ஆனால்..
அதற்கு முன்னே திடீரென ஆன் டைபாய்டு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டாள். உயிருக்குப் போராடினாள். அவளது நிலைமை மோசமானது.
கட்டிலில் கயிறாகக் கிடந்த அவள், லிங்கனை பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள். லிங்கன் அவளைச் சென்று பார்த்தார்.
''அன்பே.. என்னை ஒரு முறை 'நீலக் கண்ணழகி' என்று அழைப்பீர்களா?''
லிங்கன் தனது இதயத்தில் பொங்கிய காதலை யெல்லாம் திரட்டி, உருகவைக்கும் குரலில் ''என் அன்பே.. நீலக் கண்ணழகி'' என விளித்தார்.
ஆன் திருப்தியான புன்னகை செய்தாள். ''அன்பே.. இன்னுமொருவேண்டுகோள். நிறைவேற்று வீர்களா?''
''சொல்.. டார்லிங்!''
'' 'என் காதல் ஆபிரகாம் லிங்கனுடன் இணைந்த துணைவியான நான்- -- ஆன் ரட்லெட்ஜ், மரணம் தந்த பிரிவால் இந்தக் கல்லறையில் உறங்குகிறேன்' என்று எனது கல்லறையில் பொறித்து வைப்பீர்களா?''
வேதனை முட்கள் லிங்கனது இதயத்தை இண்டு, இடுக்கு விடாமல் கீறி ரத்தக்களறியாக்கின. அவர் குலுங்கினார். ஆன் அவரது கைகளைப் பற்றி ஆறுதல் அளித்தாள். புன்னகை மாறா முகத்துடன் விடை கொடுத்தாள்.
லிங்கன் வெளிறிப் போன முகத்துடன் வெளியே வந்தார். ஆனின் சகோதரி நான்ஸி தங்கையின் காதலன் பொலிவிழந்து நடைபிணமாகச் சென்றதை துக்கம் முட்டும் நெஞ்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சந்திப்புதான் அந்தக் காதலர்களின் இறுதிச் சந்திப்பாக அமைந்தது. 1835, ஆகஸ்டு மாதம் 25-ம் நாள், தனது 22-வது வயதில் ஆன் என்னும் அந்த வாடாமலர் உதிர்ந்தது.
லிங்கன் துடிதுடித்துப் போனார். அவள் கல்லறையிலேயே பழியாகக் கிடந்தார். காதலி விரும்பியபடி அவளது இதயத்தில் இடம் பெற்றிருந்த எழுத்துக் களை கல்லில் பொறிக்கச் செய்தார்.
'எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்; வாய் திறந்து தனது துன்பங்களை வெளியிடா தவர்; அரசியல் வாழ்வில் தான் பெற்ற பெரும் தோல்விகளைக் கூட அமைதி யாக ஏற்றுக்கொண்டவர்..' என்றெல்லாம் பெயர் பெற்றவர் லிங்கன்.
ஆனால், ஆனின் மறைவால் ஏற்பட்ட துக்கம் அவரின் மதியையும் ஆட்கொண்ட காரணத்தால், ஒரு மழை நாளின்போது ''ஐயோ, கல்லறை யிலுள்ள என் ஆன், இப்போது பெய்யும் இந்த மழையில் நனைகிறாளே..'' என்று நண்பர்களிடம் கதறினார்.
தற்கொலைக்குக் கூட துணிந்துவிட்ட அவரிடமிருந்து கத்தி போன்ற அபாயகரமான பொருட்களை மறைத்து வைத்தனர் நண்பர்கள். சிறு வயதில் தாயை இழந்து, அதனால் தன்னலமற்ற அன்பிலிருந்து வஞ்சிக்கப்பட்ட லிங்கன், அதை மீண்டும் பெற்றது காதலி ஆனிடமிருந்துதான்.
வேம்பின் கசப்பும், தேனின் இனிப்பும் அடி நாக்கிலேயே மிச்சமிருப்பது போல் அவளது நினைவுகள் அத்தனையும் லிங்கனின் வாழ்நாள் முழுவதும் அவரிடம் மிச்சமிருந்தன.
யாருக்காகவும் காத்திராத காலம் தன் கடமையைச் செய்தது. அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக லிங்கன் மாறினார். செல்வாக்குள்ள அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மேரி டோட் என்கிற பெண்மணி, லிங்கன் தன் வாழ்க்கையில் பல சிகரங்களைத் தொடப்போகிறார் என்பதை யூகித்து அவரோடு இணையச் சம்மதம் கேட்டாள்.
ஆனின் அன்புப் பிடியில் கட்டுண்டு இருந்த லிங்கன் அவளது கோரிக்கைக்கு இணங்கவில்லை. லிங்கனின் மறுப்புக்குக் காரணம் என்னவென்று விசாரித்து அறிந்து கொண்டாள் மேரி. அதன் பின் ஆன் போலவே தனது நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டாள். ஆன் உதிர்க்கும் அதே அன்பு வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினாள். பிறகு லிங்கனைச் சந்தித்தாள். மறுபடியும் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினாள்.
தனது கல்லறைக் காதலியே உயிர் பெற்று வந்த மாதிரி இருந்தது லிங்கனுக்கு. ஒரு கணமும் யோசிக்காமல் ஆனிடம், அல்ல.. அல்ல.. மேரியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தார். திருமணம் முடிந்தது.
1861-ல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி வானில் ஊர்வலம் வந்தார் லிங்கன். ஆனால், அவருடைய சொந்த வாழ்க்கை பெரும் போராட்டமாகப் போய் விட்டது. அவரை மணம் புரிந்த பின் மேரி நிறையவே மாறிப் போனாள். 'ஆனிடமிருந்து பொங்கிப் பிரவாகித்த அன்பானது அவளைப் போலவே இருந்த மேரியிடம் இருந்தும் கிட்டும்' என்று நம்பியிருந்த லிங்கனுக்கு ஏமாற்றத்தையே அளித்தாள்.
படாடோபமான வாழ்க்கையை விரும்பினாள். ஆடம்பரச் செலவு களுக்காகவே பிறப்பெடுத்த செலவாளி போல் நடந்து கொண்டாள். தனது உடமையாகத் தான் பெற்றிருந்த அந்தக் கறுப்பு வைரத்தை மதிக்காமல் அவரை எந்நேரமும் எடுத்தெறிந்து பேசினாள்.
மேரி உருவில் ஆன் ரட்லெட்ஜ்தான் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்த லிங்கனும் மனைவி மேரியை அவள் போக்கிலேயே போக விட்டார்.
அந்தச் சமயத்தில் நியூ சலேம் நகரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் லிங்கனைச் சந்தித்தார். அவரிடம் லிங்கன் ஒரு பெருமூச்சுடன் கூறினார்..
''ஆம்.. நான் ஆனைக் காதலித்தேன்.. முழு மனதுடன் காதலித்தேன். அவள் ஓர் அன்பான மனைவி யாக இருந்திருப்பாள். எப்போதும், இப்போதும் நான் அவளை நினைக்காத நேரமில்லை. என் முதல் காதல், ஒரே காதல் நியூ சலேம் நகரத்துக் கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்கிறது.''
ஆனிடமிருந்த காதல் மேரியிடமும் என்றாவது ஒருநாள் பிறக்கும் என்று அவர் நம்பினார்.
ஆனால், 1865-ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த அன்பும் காதலும் அவருக்கு மேரியிடமிருந்து கிடைக்கவேயில்லை.
பணம், புகழ், பதவி, அதிகாரம், கௌரவம் என அனைத்தும் பெற்ற மாமனிதர் லிங்கன், காதல் எனும் மென்மையான உணர்வினால் வஞ்சிக்கப்பட்டார்.
'உனக்கு ஆழ்ந்த காதல் மட்டும் கிடைக்கும். அல்லது அது தவிர மற்ற அனைத்தும் கிடைக்கும்.. எது வேண்டும் சொல்?' என்ற கேள்வி ஒருவேளை அவரிடம் கேட்கப்பட்டிருந்தால், அவரது பதில் என்னவாக இருந்திருக்கும்?
'காதல், காதல், காதல்
காதல் போயின், காதல் போயின்
சாதல், சாதல், சாதல்'
என்று சொல்லியிருப்பாரோ?
0 Comments