அமெரிக்காவிலுள்ள முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று அச்சுறுத்தும் செய்தி மற்றும் வெள்ளை நிறத் தூள் என்பவற்றைப் பெற்றதையடுத்து வாஷிங்டன் நகரி லுள்ள தனது தலைமையகத்திலிருந்து வெளியேறியுள்ளது.
ஆரம்பத்தில் மேற்படி வெள்ளை நிறத் தூள் அபாயகரமான ஒரு பொருளாகக் கருதப்பட்டதையடுத்து, அந்தத் தூளுடன் தொடுகையுற்ற அந்த அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் சபையைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் அந்த அலுவலகத்தில் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அந்தத் தூளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது அது அபாயகரமான ஒன்றல்ல என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த சபையின் இரு உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்கப்பட் டனர். கடித உறையொன்றில் சந்தேகத்துக்கிடமான வெள்ளை நிறத்தூளுடன் அனுப்பப்பட்டிருந்த அந்த செய்தியில் 'முஸ்லிம்களுக்கு வலியுடன் கூடிய மரணம்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் ஒரு உரையின் போது, முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்காவில் முஸ்லிம் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது வழமைக்கு மாறான நிகழ்வல்ல என்ற போதும், பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரு மாதத்துக்கு முன்னர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments