குறுகிய சில ஆண்டுகளுக்குள் தங்களது தீவிர
அதிரடி செயற்பாடுகளினால் உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த ஒரு
பிரமாண்டமான அமைப்பு என்றால் அது ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பெரும் பகுதிகளை
தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ஆட்சி செய்யும் ஐ. எஸ் எனும் “இஸ்லாமிய
ராஜ்ஜியம்” என்ற அமைப்பாகும்.
இதன் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி என்பவர்
ஒசாமா பின் லாதின் தலைமையிலான அல் கைதா இயக்கத்தின் ஈராக் நாட்டுக்கான
பொறுப்பாளராக செயற்பட்டவர். அத்துடன் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோதே அல்
கைதா இயக்கத்தினர் ஈராக்கினுள் ஊடுருவியதுடன் அமெரிக்காவுக்கு எதிரான ஈராக் போரில்
அல் கைதா இயக்கத்தினர்களும் பெருமளவில் பங்கு பற்றியிருந்தனர்.
ஈராக், அமெரிக்காவிடம் வீழ்ந்தபோது சத்தாம்
ஹுசைனுக்கு விசுவாசமான குடியரசு படையினர்
பெருமளவில் சரணடையவில்லை. மாறாக அல் கைதா இயக்கத்துடன் இணைந்தும்,
தனித்தும், தங்களது இராணுவ செயற்பாடுகளை அமெரிக்காவுக்கு எதிராக மறைமுகமாகவும்,
நேரடியாகவும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். அல் கைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்
லாதின் அவர்கள் 2011 இல் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தானில்
வைத்து கொல்லப்பட்ட பின்புதான் அபூபக்கர் அல் பக்தாதி தலைமையிலான ஈராக்கின் அல்
கைதா இயக்கத்தினர் தங்களது இயக்கத்தின் பெயர் ஐ. எஸ். ஐ. எஸ் என்று அறிவித்து,
இராணுவ நடவடிக்கைகளை ஈராக்கிலும், சிரியாவிலும் விரிவு படுத்தினர்.
இவர்களின் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஒன்றுக்கொன்று
முரணான கருத்துக்கள் பரவி வருவதனால், இவர்கள் இஸ்லாமிய போராளிகள் என்பதனைவிட ஒரு கொலைகார, பயங்கரவாத அமைப்பினர் என்ற பரப்புரை
மேற்குலக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகின்றது.
மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது
செய்தி ஊடகங்களாகும். இன்று உலகம் முழுவதிலும் அமெரிக்கா மற்றும் மேற்குலக
நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழே தான் ஊடக ஆதிக்கங்கள் இருக்கின்றது. எனவே அவர்கள்
எதனை உலக மக்களுக்கு கூறுகின்றார்களோ அதுவே சர்வதேசிய ரீதியில் மக்கள் மத்தியில் தாக்கங்களை
ஏற்படுத்துகின்றது.
அந்தவகையில் அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒருவர்
சுட்டு கொலை செய்யப்பட்டால் அது சர்வதேச ரீதியில் தலைப்புச் செய்தியாக பேசப்படும்.
ஆனால் இஸ்லாமிய அல்லது வறுமை நாடுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை
செய்யப்பட்டாலும் அது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
வியட்நாமில் அமெரிக்கா போர்தொடுத்தபோது அங்கு
என்ன நடைபெற்று கொண்டிருக்கின்றது என்று அமெரிக்கா கூறியதையே உலக மக்கள் நம்பினர்.
இறுதியாக அமெரிக்கா அப்பாவி வியட்நாமியர்களை கொலை செய்து தோல்வியை தழுவி, யுத்தம்
முடிவடைந்தபோதுதான் உண்மை நிலவரத்தினை உலக மக்களால் காலம் தாழ்த்தி புரிந்துகொள்ள
முடிந்தது.
பெற்றோலியம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த
நாடுகளை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முற்படுவதும், கட்டுப்பட
மறுக்கும் நாடுகளுக்கு எதிராக ஏதாவது காரணம் ஒன்றை கூறிக்கொண்டு இராணுவ
நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதும் அமெரிக்காவினதும், அதன் மேற்கத்தேய கூட்டாளி
நாடுகளினதும் வழக்கமாகும்.
அந்த வகையில் தனக்கு கட்டுப்பட மறுத்த சத்தாம்
ஹுசைனை, ஆட்சியில் இருந்து அகற்றும் பொருட்டு, ஈராக்கில் சத்தாம் ஹுசைனிடம் பயங்கர
அழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கட்டுக்கதைகளை மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி,
ஐ. நா மூலமாக விசாரனை என்ற நாடகமும் உலகுக்கு காண்பிக்கப்பட்டது. இது தங்களது
இராணுவ நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கும் பொருட்டு சர்வதேச ரீதியில் ஆதரவை
திரட்டும் தந்திரோபாயமாகும். அதனை உலக
மக்கள் நம்பினார்கள். இறுதியில் ஈராக் கைப்பேற்றப்பட்ட பின்பு ஈராக் மீதான
யுத்தத்துக்கு நியாயம் கற்பித்த ஊடகங்களினால் ரசாயன ஆயுதங்களை காண்பிக்க
முடியவில்லை.
ஈராக் மீது யுத்தம் புரிந்து நாசப்படுத்திய
மேற்குலக முன்னாள் ஆட்சியாளர்கள் “காலம் பிந்திய ஜானம்” என்பதுபோல தாங்கள் யுத்தம்
புரிந்தது தவறு என்று இப்போது வருந்துகின்றார்கள். தங்கள் நாட்டில் ரசாயன
ஆயுதங்கள் இல்லை என்று யுத்தம் ஆரம்பிக்க முன்பு சத்தாம் ஹுசைன் எவ்வளவு கூறியும்,
அதனை இந்த உலகம் நம்பவில்லை.
அமைதியாக இருந்த நாட்டில் பேரவலத்தை ஏற்படுத்தி,
பல லட்சக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்று, அவர்களது பொருளாதாரத்தினையும் சூறையாடி,
இன்றுவரை முடிவில்லா யுத்தம் ஒன்றுக்கு வழிவகுத்துவிட்டு, இப்போது எந்தவித
அதிகாரமும் இல்லாத நிலையில் தங்களது வாழ்வின் கடைசிக்காலத்தில் வருந்தி என்ன பயன்?
இன்று ஐ. எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள பிரதேசங்களில் என்ன நடக்கின்றது என்று ஐ. எஸ் அமைப்பினரால்
உத்தியோகபூர்வமாக தகவல்களை வெளியிட்டாலே தவிர, வேறு யாராலும் அங்குள்ள கள நிலவரங்களை
அறிந்துகொள்ள முடியாது.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்
இடம்பெறும்.......................................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


0 Comments