பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகை நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் பலரும் ஆளும் கட்சி தமிழ் எம்.பி.க்களும் சமுகமளித்திருக்கவில்லை.
பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், மலையக புதிய கிராமம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் பி. திகாம்பரம், தபால், தபால்சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, மற்றும் சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிய தூதுவர் வை.கே சின்ஹா, அமெரிக்க மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர்களான இராதாகிருஷ்ணன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் ஆளும் கட்சியின் தமிழ் எம்.பி.க்களும் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதேவேளை, தீபாவளி பண்டிகையை ஞாபகப்படுத்தும் வகையில் தபால் உறை வெளியிட்டு வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதனை தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் தீபாவளி பண்டிகைக்கான விசேட பூஜைகளுடன், பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டன.
அத்துடன் காலம் சென்ற சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி நிகழ்ச்சி நிரலின் கலை நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
0 Comments