பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ள இடைக்கால பொருளாதாரத் திட்டமானது நாட்டின் அரச துறையை முழுமையாக தனியார் மயப்படுத்தி நாட்டை நாசப்படுத்தும் ஜே.ஆர். மற்றும் பிரேமதாசவின் கலப்பு திட்டமாகுமென சாடியுள்ள ஜே.வி.பி. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஜேம்ஸ் பெக்கர் கிடைத்ததைப்போல் பிரதமர் ரணிலுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சீபா உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டின் பொருளாதரத்தை முழுமையாக சீரழிக்க முயற்சிக்கும் புதிய ஆட்சியாளர்கள் சர்வதேச கறுப்புப்பணம் அனைத்தையும் இலங்கையில் குவிக்கவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகமான பெலவத்தையில் நேற்று நடைபெற்றது. இதன் போது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால பொருளாதார திட்டமானது இந் நாட்டின் அரச பொருளாதாரத் துறையை முழுமையாக சீரழிக்கும் ஒரு திட்டம் என்றே நாம் கூறுகின்றோம். அதேபோல் இந்த திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்றாம் தலைமுறை பொருளாதார திட்டமாகவே அமைந்துள்ளது. 1977ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட பொருளாதார திட்டமானது நாட்டின் பொருளாதாரத் துறையையும், நாட்டின் உற்பத்தி வீதத்தையும் முழுமையாக சீரழித்தது. அதேபோல் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட பொருளாதார திட்டத்தில் நாட்டின் அரச சொத்துக்கள் அனைத்தும் தமது தேவைக்காகவும் வேண்டப்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள இடைக்கால பொருளாதாரத் திட்டமானது மேற்குறித்த இரண்டு தலைவர்களின் பொருளாதாரத் திட்டங்களினது கலவையாகவே உள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால பொருளாதார திட்டமானது நாட்டின் அரச துறையை முழுமையாக ஒன்றிணைத்து அவற்றை முழுமையாக தனியார் மயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அரச சேவைகளை முழுமையாக தனியார் மயப்படுத்தும் பாரிய வேலைத்திட்டத்தை இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது. இதனால் நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. நாட்டின் அரச துறையையும் அதனுடன் கூடிய பொருளாதார செயற்பாடுகளையும் தனியார் மயப்படுத்த முயற்சித்த காலகட்டத்தில் எமது ஏற்றுமதி வீதம் பாரிய வீழ்ச்சியை கண்டது. உலகச் சந்தையில் 200 இல் ஒரு சதவீதமாக இருந்த இலங்கையின் பங்குகள் இப்போது 2000 இல் ஒரு சதவீதமாக மாறியுள்ளன. இதற்கு எமது பொருளாதார நகர்வுகளே பிரதான காரணமாகின்றது. ஆகவே அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் சர்வதேச வர்த்தகச் சந்தையிலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் எமது நாடு பாரிய பின்னடைவையே எதிர்கொள்ள நேரிடும்.
சீபா உடன்படிக்கை
இலங்கை அரசாங்கம் மீண்டும் சீபா உடன்படிக்கைகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சீபா உடன்படிக்கை தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் அறிந்தும் மீண்டும் அவ்வாறான ஒரு பொருளாதார சிக்கலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. 2000 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்ட பின்னர் இலங்கையின் தேசிய பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டது. எமது தேசிய பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியாவின் நேரடித் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்தது. அதனால் எமது நாட்டின் சாதாரண வியாபாரிகளும் விவசாயிகளுமே அதிகமாக பாதிக்கப்பட்டனர். அதே நிலைமை மீண்டும் இப்போது தலைதூக்கியுள்ளது. ஆகவே இந்த சீபா உடன்படிக்கையை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
ரணிலுக்கு ஜோர்ஜ் சொரோக்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமது பொருளாதார நண்பனாக எவ்வாறு சர்வதேச சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கரை பயன்படுத்தி இலங்கையில் தேசிய வியாபார நடவடிக்கைகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை சூறையாட முயற்சித்தாரோ அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது சர்வதேச ரீதியில் சட்டவிரோத முறையில் செயற்படும் வியாபாரியான ஜோர்ஜ் சொரோக் என்பவரை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளார்.
இவர் மேற்கத்தேய நாடுகளில் மட்டுமல்லாது ஆசிய–பசுபிக் நாடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். அந்நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய சூத்திரதாரியாகவும் விமர்சிக்கப்படும் ஒருவராவார். அவ்வாறானவரை இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டு சர்வதேச ரீதியில் பாவனையில் இருக்கும் அனைத்து கறுப்புப்பணத்தையும் நாட்டுக்குள் கொண்டுவந்து குவிக்கவே முயற்சிக்கின்றார் இதற்கு இடமளிக்கமாட்டோம்.
0 Comments