ஜனநாயக செயற்பாடுகளை மீறும் வகையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படுகின்றனர். பல்கலைக்கழக மாண வர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
பொலிஸாரின் காட்டுமிராண்டி தனமான செயற்பாடுகளுக்கு மாணவர்கள் பதிலடி கொடுத்தால் அது அரசாங்கத்தையே பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பவற்றை நாம் அவதானித்துள்ளோம். மாணவர்களின் சாதாரணக் கோரிக்கைகளை கூட ஏற்காது அவர்கள் மீதான அடக்குமுறைகளை கையாண்டமையை அவதானித்தோம். அவ்வாறான நிலையில் ஜனவரி மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. சாதாரண ஜனநாயக செயற்பாடுகளை முழுமையாக பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் ஆட்சி மற்றதை ஏற்படுத்தினர்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகியும் அதிகாரங்களை அவர்களின் கைகளில் கொடுத்தமையும் நாட்டை ஜனநாயக பாதையில் கொண்டு செல்லவேயாகும். ஆகவே மக்கள் எதற்காக தமக்கு அதிகாரத்தை கொடுத்தனர் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் கொடுத்த அதிகார பலத்தினை எவ்வாறு கையாள்வது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த அரசாங்கத்தை நம்பி மக்கள் கொடுத்த அதிகாரத்தை இவர்களும் தவறான விதத்திலேயே பயன்படுத்துகின்றனர். இவர்களின் தேவையும் அதிகாரத்தை தக்க வைக்கவேண்டும் என்பதேயாகும் என்பது தெளிவாகியுள்ளது. மாணவர்களின் தேவை, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசாங்கமும் நிராகரிக்கின்றது.
கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் எவ்வாறு நிராகரித்ததோ அதேபோல் இப்போதும் இந்த அரசாங்கம் பல்கலைக்ககழக மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்கின்றமை மட்டுமல்லாது அவர்கள் மீதான தாக்குதல்களையும் மேற்கொள்கின்றது.
மாணவர்கள் தனது கோரிக்கைகளை முன்வைத்து எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை கோரவும், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்வைக்கவும் சகல உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. அந்த வகையில் தான் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
அதேபோல் அமைதியான முறையில் தமது கல்விக்கான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் செய்தனர். அவ்வாறான நிலையில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களில் சிலரை கைது செய்துள்ளனர். அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டாலும் மாணவர்கள் மீது இவ்வாறு காட்டுமிராண்டித்தனமான வகையில் தாக்குதலை நடத்தியமைக்கு இதுவரை யாரும் பொறுப்புக்கூறவில்லை.
ஆனால் இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். முன்னைய அரசாங்கம் எவ்வாறு மாணவர்கள் விடயத்தில் அக்கறையின்றி செயட்பட்டதோ அதேபோல் இந்த அரசாங்கமும் செயற்படக் கூடாது. மாணவர்கள் இவ்வாறு தமது உரிமைக்காக போராடுகின்றனரோ அதை தடுக்க அவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை விடுத்து அடக்குமுறைகளை கையாள வேண்டாம். இந்த விடயத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அது அரசாங்கத்தை பாதிக்கும் வகையிலேயே அமையும்.
ஆகவே இந்த சம்பவத்தை தட்டிக்களிக்காது உடனடியாக தீவுக்கான வேண்டும். அரசாங்கம் மாணவர்களை தண்டிக்காது அவர்களை பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதியும்இ பிரதமரும் ஜனநாயகத்தை மீறி செயற்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
0 Comments