தேசிய ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தும் நபர்கள் மற்றும் குழுவாக செயற்பட்டு பொது அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் தரப்பினரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து கொண்டு இவ்வாறு தடைகளை ஏற்படுத்தி வரும் தரப்பினரை நீக்கி புதிய சக்திகளை இணைத்து வெற்றிக்கொள்ளக் கூடிய வகையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள முன்னணியின் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது.
இதனடிப்படையில், தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடதுசாரி கட்சிகள் வழங்கப் போகும் அரசியல் பங்களிப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், இடதுசாரி கட்சிகள் தொடர்பிலும் முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மறுசீரமைக்கும் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக்கட்சி, சோமவன்ஸ அமரசிங்க தலைமையிலான மக்கள் சேவை கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அதிருப்தியடைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி சென்ற தரப்பினரை மீண்டும் இணைத்துக் கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகிறது.
0 Comments