Subscribe Us

header ads

மூன்று ரக்காத்

“அல்லாஹூ அக்பர் ” தக்பீர் கட்டிக்கொண்டு மஃரிப் தொழத் தொடங்கினாள் சப்னா. கடைக்குப் போய் பொருட்கள் எதையும் வாங்காமல் மறந்துவிட்டோமா என அங்கலாய்க்கத் தொடங்கிய அவள் மனது, கடைக்குப் போனதை கொஞ்சம் மீட்டிப் பார்க்க நினைத்தது…

என்னனென்ன பொருட்கள் வேண்டும் என்று ஒரு தாளில் எழுதி ஒவ்வொன்றாய் வாங்கி வாங்கி அவற்றை சரி அடையாளமிட்டு வந்தாள், ஓரிரு பொருட்கள் இருக்கின்ற இடத்தை தேடித் தேடியே அவளுக்கு அலுத்துப் போனது, ஒருவாறு எல்லா பொருட்களையும் வாங்கிவிட்ட திருப்தி அவளுக்குள்.


வாங்கிய பொருட்களை எல்லாம் கூடையில் இட்டு காசு கொடுக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறாள், பொருட்கள் ஒவ்வொன்றாய் விலையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது, அப்போது தான் மன்டைக்குப் பட்டது மகன் கேட்ட 80 பக்க ஒற்றை ரூல் கொப்பி…. ஞாபகம் வந்த சப்னா “கடைக்காரரிடம் கொஞ்சம் நிறுத்தும்படி சொல்லி விட்டு ஓடி ஓடி கொப்பியை தேடத்தொடங்கினாள் நெடு நேரமாய் தேடியும் அவளால் அதை கண்டு கொள்ள முடியவில்லை, உதவியாளன் ஒருவரின் உதவியுடன் ஒருவாறு அதை தேடி எடுத்துக் கொண்டு ஓடோடி பணம் கொடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள், பெரு மூச்சு அவளுக்கு மகனின் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டதாய் திருப்தி அவளுக்குள்.

பணத்தை கொடுத்துவிட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து வெளியே வந்தவள், அவ்வழியால் வந்த முச்சக்கர வண்டியை கையை காட்டி நிறுத்தி ஏறிக் கொண்டாள் வீட்டை நொக்கி வண்டி நகர்ந்து கொண்டிருந்தது, திடீரென்று பதற்றமான அவள் வண்டியை திருப்பச் சொல்லி மீண்டும் அந்தக் கடைக்கு போகும்படி வேண்டிக் கொண்டாள் என்னவோ ஏதொவென அவனும் மெல்ல வண்டியை திருப்பி கடையை நேக்கி நகரலானான்.
கடையை அடைந்ததது அவசர அவசரமாய் காசு கொடுக்கும் இடத்திற்குப் போய் தன் ரசீதை காட்டி விலை அதிகமாகப் போட்டிருபப்தாக சப்தமிட்டாள், ரசீதை வாங்கிப் பார்த்த அவரும், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதிகமாய் போட்டிருந்த ஐந்து ரூபாயை திருப்பிக் கொடுத்தார். சப்னாவுக்கு ஆனந்தம் தாளவில்லை, மீண்டும் வந்து முச்சக்கர வண்டியில் ஏறி முக மலர்ச்சியோடு  வீட்டை அடைந்தவள் ,


பற பறக்க உழூ செய்து கொண்டு மஃரிப் தொழுத் தொடங்கியவள் “பசிக்குதும்ம” என்று தூர இருந்து மகனின் சத்தம் கேட்டு நினைவுக்கு திரும்பினாள், அப்போது அவள் ஸலாம் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்ததை  அறிந்தாள்… இடையில் எத்தனை ரக்காத் தொழுதோம்? இரண்டாம் ரக்காத்தில் உக்கார்ந்தோமா?? எனும் கேள்விகளோடு ஸலாம் கொடுத்து முடிக்கிறாள்…

(குறிக்கப்படும் பெயர் யாரையும் குறித்து அவர் மனதை புன்படுத்துவதற்காக அல்ல)

-Nusry-

Post a Comment

0 Comments