கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த சென் ஜோர்ஜ் நகர மக்கள் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக முன்கூட்டியே கிறிஸ்மஸ் கொண்டாட இருக்கிறார்கள்.
இந்நகரைச் சேர்ந்த இவான் வெல்வுட்(7) தனது 2 வயதில் மூளைப் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானார். மூளையில் ஏற்பட்டுள்ள இந்தப் புற்றுநோயை சத்திரசிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் விழா வரை இவான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அவனுக்காக முன்கூட்டியே கிறிஸ்மஸைக் கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து இவானின் தாயார் ஷெல்லி பேஸ்புக் மற்றும் நிதியுதவி செய்யும் ஒரு வலைத்தள பக்கத்திலும், தனது நிலையை எடுத்துரைத்திருந்தார்.
இந்த நகர மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் பலரும், நிதியுதவி செய்ததோடு, பேஸ்புக்கில் உள்ள பலரும் இவானுக்காக பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.
இன்று (25) இந்த கிறிஸ்மஸ் கொண்டாடப்பட இருக்கின்றது. சென் ஜோர்ஜ் நகரம் முழுவதிலும் இன்று கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன், பேஸ்புக் மூலமாக சுமார் 3700 பேர் இணைந்து கொண்டாடுகின்றனர்.
அதுமட்டுமன்றி சிறப்பான உணவுகளுடன் இந்த நகர நிர்வாகம் இவானுக்காக பிரத்தியேகமாக அணிவகுப்பு நிகழ்ச்சியை இன்று நடத்தவுள்ளமை, குறிப்பிடத்தக்கது.
0 Comments