தனித்து ஆட்சி அமைப்பதற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நகைச்சுவையாக தெளிவுபடுத்தியமை அனைவரினதும் அவதானத்தை ஈர்த்தது.
தேசிய அரசாங்கத்திற்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்குமுள்ள வித்தியாசம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் காலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்னும் ஆறு பேரை இணைத்திருந்தால் எமக்கு பெரும்பான்மை ஆட்சியை ஏற்படுத்தியிருக்க முடியும்.
இந்நிலையில் தனித்து ஆட்சி அமைப்பது என்பது முச்சக்கர வண்டியில் சிறிய பாதையினூடாக பயணிப்பதனை போன்றதாகும். முச்சக்கர வண்டியில் சிறிய பாதையூடாக பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாகும். சிறிய பாதையினூடாகவே பயணிக்க வேண்டியேற்படும். வாகன நெரிசலுக்கு உள்ளாக நேரிடும். பாதை நெடுகிலும் குன்றும் குழியுமாகவே காணப்படும். ஆகவே இதனூடாக பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமானது.
இருந்தபோதிலும் தேசிய அரசாங்கம் என்பது அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதனை போன்றதாகும். அந்த பயணமானது வேகமாக செல்லகூடியதாகும். பல வழி பாதைகளை கொண்டதாக காணப்படும். வாகன நெரிசல் கிடையாது. பாதைகள் சீராக காணப்படும். ஆகவே எமது இலக்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்யமுடியும்.
இருந்தபோதிலும் வாகன சாரதி பாதுகாப்பு பட்டியை அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் பயணம் இடைநடுவே நின்று விடும். அதேபோன்று இன்னுமொரு எச்சரிக்கையும் உள்ளது. வாகன சாரதி எந்த காரணம் கொண்டும் நித்திரை செய்ய கூடாது. வாகன சாரதி நித்திரை கொண்டால் பயணம் அவ்வளவுதான்.
எனவே அதிவேகத்தில் பயணிப்பது என்பது தேசிய அரசாங்கத்தில் பயணிப்பதாகும். இருந்தபோதிலும் நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எக்காரணம் கொண்டும் நித்திரை கொள்ள மாட்டோம். மற்றவர்கள் நித்திரை கொள்ளாமல் இருந்தால் பயணம் வெற்றிகரமான பயணமாக அமையும் என்றார்.
0 Comments