தெனியாய கல்வி வலயத்திலுள்ள ஐந்து தமிழ் பாடசாலைகளுக்கும் அண்மையில் நியமிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு இது வரை சம்பளம் வழங்கப்படாமை குறித்து விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தெனியாய கல்வி வலயத்திலுள்ள தெனியாய புனித மத்தேயு மகா வித்தியாலயத்திற்கு ஒரு ஆசிரிய உதவியாளரும், ஏண்போர்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு மூவரும், அனின்கந்த தமிழ் வித்தியாலயத்திற்கு ஐந்து பேரும், பெவர்லி தமிழ் வித்தியாலயத்திற்கு மூன்று பேரும், என்சல் வத்த தமிழ் வித்தியாலயத்திற்கு ஐந்து பேருமாக மொத்தமாக 17 பேர் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தமது கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களையும் கடந்த நிலையில் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவ் ஆசிரியர் உதவியாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக வலய கல்வி பணி மனையோடு தொடர்பு கொண்டு கேட்டபோது மாகாணக் கல்வித் திணைக்களத்திலிருந்து தகுந்த கடிதங்கள் இது வரையில் கிடைக்கப் பெறாமையினால் சம்பளம் வழங்க முடியாதுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
0 Comments