தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தமை தமிழ் பிரிவினைவாதத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதன் மூலம் அமிர்தலிங்கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகியுள்ளதாக போர்க் கொடிதூ க்கும் மஹிந்த சார்பு அணி எம்.பிக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு உளவாளிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
பாராளுமன்றத்திலுள்ள குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே மஹிந்த சார்பு அணியை சேர்ந்த எம்.பி.க்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம்.பி. குறிப்பிடுகையில்;
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 56 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் கையளித்தோம்.
ஆனால் இது மீறப்பட்டு பாராளுமன்ற சம்பிரதாயம் அரசியலமைப்பு ஆகியவற்றை பின்பற்றாமல் 16 ஆசனங்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது பிழையான தீர்மானமாகும். தனக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட்டதாக சபாநாயகர் எமக்கு தெரிவித்தார்.
எனவே இவ்விடயம் தொடர்பான உண்மையான தகவல்களை எதிர்வரும் நாட்களில் சபாநாயகருக்கு வழங்குவோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்காலத்தில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானம் மாற்றப்படலாம் என்றார்.
விமல் வீரவன்ச எம்.பி. இங்கு உரையாற்றுகையில்,
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்த செய்தி கேட்டு புலம் பெயர் தமிழர்கள் கனடா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தன் ஆதரிப்பதோடு அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் நிலைமை உருவாகும்.
வெளிநாட்டு உளவுப் பிரிவினரின் முயற்சிகளினால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். இன்று வெளிநாட்டு உளவுப் பிரிவினரின் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி முன்னெடுக்கின்றார். எமக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிக்பொக்கட் அடிக்கப்பட்டுள்ளது. நாடு காட்டிக் கொடுக்கப்படுகிறது என்றார்.
செய்தியாளர் மாநாட்டில் உதயகம்மன்பில எம்.பி உரையாற்றுகையில்,
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கியதன் மூலம் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இத்தோடு அமிர்தலிங்கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகிறது.
இதன் மூலம் சம்பந்தன் இலங்கையின் அடுத்த பிரதமராகும் ஆபத்தும் தலைதூக்கியுள்ளது. கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததை எதிர்க்கவில்லை. ஆனால்
நாட்டுக்கு எதிரானவர்களிடம் அப் பதவி வழங்கப்பட்டுள்ளதையே எதிர்க்கின்றோம் என்றார்.
வாசுதேவ நாணயக்கார எம்.பி. உரையாற்றுகையில்,
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படுமானால் அதனை வரவேற் கின்றேன். ஆனால் பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் அரசியலமைப்பு மீறப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட் டதையே எதிர்க்கின்றோம் என்றார்.
0 Comments