Subscribe Us

header ads

உஷார்.. !பில்லிசூன்யம் நீக்குவதாக கூறும் மனிதர்களிடமிருந்து உஷார்..!



அவர் பில்லிசூன்யம், ஏவல், செய்வினை என்றெல்லாம் சிலவற்றை கூறி, அவற்றை எல்லாம் நீக்கி, பிரச்சினை ஏதும் இன்றி எல்லோரையும் மகிழ்ச்சியாக வாழவைப்பதாக சொல்லிக்கொண்டிருப்பவர்.

30 வயதான அந்த பெண் அவரிடம் ஆலோசனை கேட்க சென்றாள். வரவேற்பறையில் உட்காரவைக்கப்பட்டாள். வரவேற்பு பெண் அழகாக இருந்தாள். இவளது பெயர், விவரம் கேட்டு அவைகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட்டு, தனி அறை ஒன்றில் உட்காரச்சொன்னாள்.

30 வயது பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் அருகில் ஏழெட்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். ஆண் யாரும் இல்லை. ஒன்றிரண்டு பெண்கள், தங்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும் அனைத்தையும் அவர் மந்திர சக்தி மூலம் தீர்த்துவைத்துவிட்டதாகவும் அதற்கு நன்றி தெரிவித்து விட்டு செல்ல வந்திருப்பதாக, அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். காணிக்கையாக கொடுக்கப்போவதாக கட்டாக பணத்தையும் காட்டினார்கள். இன்னும் சிலர், ‘இவரிடம் வந்த பின்பு தங்கள் குடும்ப பிரச்சினை படிப்படியாக குறைந்துகொண்டிருப்பதாக’ சொன்னார்கள்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. 30 வயது பெண் செல்போனை நோண்டினாள். யாரிடமோ பேசினாள். முகம் சோகமாக இருந்தது. அவள் பாடிலாங்வேஜ் பதற்றத்தையும், கவலையையும் வெளிப்படுத்தியது.

வெகுநேரமாகியும் அந்த மந்திரவாதி உள்ளே அழைக்கவில்லை. ரிசப்ஷன் பெண்ணிடம் கேட்டபோது, ‘காத்திருங்கள்.. உள்ளே ஒரு முக்கிய வி.ஐ.பி. இருக்கிறார்’ என்று பதில் சொன்னாள்.

30 வயது பெண் எரிச்சலோடு உட்கார்ந்திருந்தபோது, பக்கத்தில் இருந்த பெண் அவளிடம் ஆறுதலாக பேச்சு கொடுத்தாள். முதலில் தன் சோக கதையை சொன்னாள். மெல்ல மெல்ல 30 வயது பெண்ணின் மனதை அசைத்து, அவள் தனது சோக கதையை சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டாள்.

கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து அழைப்பு வந்தது. இவள் போய், முரட்டு தோற்றத்தில் இருந்த அவரை பார்த்ததும் கையெடுத்து கும்பிட அவரோ, ‘உனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியிருக்கிறது. குழந்தை இல்லை. உன் மீது கணவனுக்கு சந்தேகம். தாம்பத்ய வாழ்க்கை சரியில்லை. பின்பு எப்படி குழந்தை பிறக்கும்?’ என்று அவர் கேட்டதும் அவள் அதிர்ந்தாள்.

அவள், ‘இந்த உண்மை எல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது?’ என்று நிலைகுலைந்து நிற்க, உடனே அவர், ‘இதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறாயா? கடந்த ஜென்மத்தில் உன்னை அவன் ஒருதலையாக காதலித்தான். நீ கிடைக்காத ஏக்கத்தில் அவன் இளம் வயதிலே தற்கொலை செய்துகொண்டான். மீண்டும் அவனே இந்த ஜென்மத்தில் உன் கணவனாகியிருக்கிறான். அதற்கு அவன் உன்னை எப்படியாவது பழிவாங்கியே தீருவான்..’ என்று கூறிவிட்டு அவர், அவளது முகத்தை ஊடுருவிப் பார்த்ததும், அவள் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.

அப்படியே அவர் முன்னால் முழங்காலிட்டு உட்கார்ந்தாள். ‘என் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? எப்படியாவது நான் நன்றாக வாழ வழிகாட்டுங்கள்..’ என்று கண்ணீர் மல்க கூறினாள்.

நிறைய படித்தவள், கைநிறைய சம்பாதிப்பவள், அறிவாளி ஆனால் தன்னை மறந்து அந்த நபரிடம் மண்டியிட்டாள். ஆறு மாதத்திற்குள் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் அவரிடம் இழந்துவிட்டாள். தனது வாழ்க்கை அந்தரங்கத்தையும் அவரிடம் வெளிப்படையாக கூறிவிட்டாள். அந்த நபரிடம் எந்த சக்தியும் கிடையாது என்பது அவளுக்கு தாமதமாகத்தான் புரிந்தது. ஆனாலும் துணிச்சலாக அவரிடம் இருந்து வெளியேவர அவளால் முடியவில்லை. காரணம் மனோரீதியாக பலவிதங்களில் அந்த நபரால் அவள் பயமுறுத்திவைக்கப்பட்டிருக்கிறாள்.

நீங்களும் இது மாதிரியான ஆசாமிகளிடம் மாட்டிக்ககூடாதுங்கிறதுக்காக அவரது தொழில்முறை ரகசியத்தை மட்டும் சொல்றோம்!

பெண்கள் மட்டுமே இவர்களிடம் ஏமாறுகிறார்கள். போனில் பேசி அப்பாயிண்ட்மென்ட் கேட்கும்போது உடனே கொடுப்பதில்லை. அவர் அந்த நாட்டில் இருக்கிறார்.. இந்த நாட்டில் இருக்கிறார்.. என்று ‘பில்டப்’ கொடுத்துவிட்டு, 20, 25 நாட்கள் கழித்து வரச் சொல்வார்கள்.

குறிப்பிட்ட நாளில் வரும்போது உள்ளே ஏழெட்டு பெண்கள் இருப்பார்கள். அனைவரும் அவரது ‘செட்டப்’ பெண்கள்தான். அவர்கள் முதலில் அந்த மந்திரவாதி மீது நம்பிக்கை ஏற்படும்படி பேசுவார்கள். பின்பு எப்படியாவது பேசிப்பேசி, புதிதாக வந்திருக்கும் பெண்களிடம் இருந்து ஓரளவு தகவலை கறந்து உள்ளே இருக்கும் ஆசாமியிடம் சொல்லிவிடுவார்கள். மட்டுமின்றி அவர் உள்ளே தனியறையில் அமர்ந்து வரவேற்பறையில் இருக்கும் பெண்ணை சர்க்யூட் டி.வி.யில் அங்குலம் அங்குலமாக பார்த்து அவள் மனநிலை, உடல் மொழி போன்ற அனைத்தையும் கவனிக்கிறார். அவரது செட்டப் பெண்கள் கொடுக்கும் தகவலையும், அவராக அவளது செயல்பாடு பற்றி உணரும் விஷயங்களையும் வைத்து, ‘முன்ஜென்ம புனைக்கதையை’ கூறி, அப்படியே ஆளை கவிழ்த்துவிடுகிறார்.

புரிஞ்சுதுதானே..! அவ்வளவுதானுங்க வேணும்..!!

– நன்றி டெய்லி தந்தி

Post a Comment

0 Comments