Subscribe Us

header ads

ரூ. 500 கோடியில் பிறந்தநாள் கேக்: அரபு நாட்டு கோடீஸ்வரருக்கு பெருகிவரும் எதிர்ப்பு



உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி வறுமையாலும் வாடிவரும் நிலையில் பிறந்தநாள் கேக்குக்காக 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை அரபு அமீரக நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த பிரபல செல்வந்தர் செலவழித்துள்ளது பெரும் பரபரப்பையும், பரவலான கொந்தளிப்பையும் உண்டாக்கியுள்ளது.

உலகின் பிரபல பேஷன் டிசைனரான டெபி விங்காம் என்றப் பெண் உருவாக்கியுள்ள இந்த கேக் 450 கிலோ எடையில் 4 ஆயிரம் வைரக்கற்கள், செவ்வந்திக்கற்கள் மற்றும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

இந்த கேக்குக்கு ஆர்டர் செய்த செல்வந்தர் அரபு அமீரகத்தின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? யாருடைய பிறந்தநாளுக்காக இதை ஆர்டர் செய்துள்ளார்? என்ற விபரங்களை வெளியிட இந்த கேக்கை தயாரித்தவர் மறுத்துள்ளார்.

எனினும், உலகின் மிக விலையுயர்ந்த கேக்காக கருதப்படும் இதற்காக ஏழரை கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 500 கோடி ரூபாய்) செலவிடுவதற்கு பதிலாக வறுமையால் வாடும் ஏழை மக்களுக்கும், நாடிழந்து, அகதிகளாக காலடி பதிக்ககூட இடம் கிடைக்காமல் பசியாலும், பட்டினியாலும் அல்லல்படும் லட்சக்கணக்கான மக்களுக்கும் அந்த அரபு நாட்டு கோடீஸ்வரர் உதவி இருக்கலாம் என உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளையும், திருமண நிச்சயதார்த்தத்தையும் ஒருசேர கொண்டாட விரும்பிய அந்த கோடீஸ்வரர், தனது செல்வ வளத்தை மணமகன் வீட்டாருக்கு பறைசாற்றும் விதமாக இந்த கேக்குக்கு ஆர்டர் தந்ததாக உறுதிப்படுத்த இயலாத தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.


Post a Comment

0 Comments