அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிப்பார். இவ்விடயத்தில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் கிடையாது எனத் நீதி அமைச்சரும் ஐ.தே.முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான குழுவொன்று இருப்பதை ஜனாதிபதி வெளியிட்டுள்ள விளம்பரம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவராக பதவி வகிக்கின்றார்.
ஆனால் அவர் இந்நாட்டின் ஜனாதிபதி, எனவே அரசியல் கட்சிகளின் யாப்புக்கு அமைய அவர் நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டார். இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமையவே அவரது நடவடிக்கைகள் அமையும். எனவே பொதுத்தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மற்றும் அமைச்சர்களை தனது விருப்பின் பிரகாரமே ஜனாதிபதி நியமிப்பார்.
அரசியலமைப்பின் 42 ஆவது சரத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியின் விருப்பிற்கு எதிராக செயற்பட எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி தொடர்பாக அம்முன்னணியின் தலைவரென்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளம்பரம் ஒன்றை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவான குழுவொன்று இருப்பதனையும் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கும் நிராகரிக்கும் குழுவொன்றும் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இந்த விளம்பரம் தொடர்பில் ஐ.தே.கட்சி அலட்டிக் கொள்ளவில்லை.
0 Comments