(Dr.B.R.J.கண்ணன்)
இதய நோயால் வருடந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், அதிகரித்த கொழுப்புச் சத்து, இரத்த உறவுத் திருமணங்கள் போன்றன இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
இத்தோடு வளர்ச்சி மாற்றம் என்று சொல்லப்படும் அதிகரிக்கும் உடல் எடை முக்கிய காரணம் ஆகும். இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளின் பெண்களே பெரிதும் இதற்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
பெண்களின் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆகையால், பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகே பெண்கள் மாரடைப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இது குறித்து ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு 'ஹார்மோன் ரிப்ளேஸ்மன்ட் தெரபி" எனும் செயற்கை முறையில் ஈஸ்ட்ரோஜனை வழங்கும் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இது, குறிப்பாக மாரடைப்பு நோயைத் தடுப்பதற்காகவின்றி, மாதவிடாய் நிறுத்தத்துக்கான அறிகுறிகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும். எப்படியெனினும், மாதவிடாய் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் செய்து கொள்ளவேண்டும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, பெண்கள் மாரடைப்பு நோயினால் இறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. ஆண்களைப் போலவே பெண்களும் நெஞ்சு வலியில் துடித்தால் இந்நோய் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். மாறாக, இந்த நோய் சில அசாதாரண அறிகுறிகளைப் பெண்களிடம் ஏற்படுத்துவதால் இதை ஆரம்பகட்டத்தில் இனம் காணுவது கடினமாகிறது.
அஜீரணம், அதிக சோர்வு, மூச்சு வாங்குதல், தலை சுற்றுதல், குமட்டல், அதிக வியர்வை போன்ற அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால், மாரடைப்பால் இவை ஏற்படுகின்றனவா என்பதை மருத்துவப் பரிசோதனைகள் செய்து அறிந்துகொள்ள வேண்டும்.
'Nuclear Isotope' என்ற ஒருவிதப் பொருளை உடலில் செலுத்தி, அதன்பின் ஏற்படும் மாறுதல்களைப் படம் பிடிப்பதே பெண்களுக்கு ஏற்ற பரிசோதனை ஆகும். குறிப்பாக, உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்யாத பெண்களுக்கு இந்தப் பரிசோதனை மிகப் பொருத்தமானது.
நோயின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் சோதனை மேற்கொள்ளலாம். அனைவரும் உடல் எடையை மிதமாக வைத்துக்கொள்வதால் இந்நோயின் சாத்தியக் கூறுகளைக் குறைக்கலாம்.
தொடர்புக்கு: 0091 452-2545400
தகவல் : சென்னை அலுவலகம்
0 Comments