அரசியலமைப்பை மீறி அமைச்சர்களின் எண் ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் நாடும் மக்களும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே புதிய பாராளுமன்றத்தில் ஒரு நாள் விவாதத்தை கோரியுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அமைச்சரவை விவகாரம் தொடர்பில் வினவியபோதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய பாராளுமன்றம் எதிர்வரும் முதலாம் திகதி கூடவுள்ளது. இதன் போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கொள்கை உரை ஆற்றுவார். அதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 2 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால் ஜே.வி.பி. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை விஷேட விவாதம் ஒன்றுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதோடு எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட விவாதம் நடைபெறவுள்ளது.
இதனால் அமைச்சரவை பதவியேற்பு 2 ஆம் திகதி இடம்பெறாது. 4 ஆம் திகதி நடைபெறும் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய முண்னணியும் -ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து ஏற்படுத்தப்போகும் அரசுக்கு தேசிய அரசாங்கம் என கூற முடியாது. அது இரண்டு கட்சிகளுக்கிடையேயான கூட்டரசாங்கமாகும்.
ஆனால் இலங்கையின் அரசியலமைப்பை மீறி அரசில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக உண்மையை நாடும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சிமைப்பதோ அவர்களது தேசியப் பட்டியல் தொடர்பாகவோ எமக்கு பிரச்சினையில்லை. ஆனால் அரசியலமைப்பை மீறிய அமைச்சர் தொகை தொடர்பிலேயே பிரச்சினை உள்ளது..
எனவே பாராளுமன்றத்தில் இது தொடர்பாக எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட விவாதம் கோரியுள்ளோம். அதற்கு இணக்கம் தெரிக்கப்பட்டுள்ளது என்றார்.
0 Comments