ரத்த வங்கிக்கு 4-வது முறையாக சென்று விட்டு பதட்டத்துடன் திரும்பி வரும் தீன், தனது மனைவி ஹீதரின் அலறல் சதத்தை கேட்டு ஆறுதலடைகிறார். நல்ல வேளை, மருத்துவர்கள் சொன்னது போல் அவளுக்கு எதுவும் ஆகி விடவில்லை. வேகமாக ஓடும் செவிலியர்களும் மருத்துவர்களும் தீனைக் கடந்த படி இருக்கிறார்கள். ஹீதருக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்த மருத்துவர்கள் அவளது குடும்பத்தினரையும் வரச் சொல்லி விட்டார்கள்.
இங்கிலாந்தின் கெட்டரிங் மருத்துவமனையில் தன் மனைவி உயிர் பிழைப்பாளா என்று ஒவ்வொரு நொடியும் தீனும் அவரது மனைவியின் குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர். குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. சிசேரியன் செய்து மருத்துவர்கள் குழந்தையை எடுத்து விட்டார்கள். ஆனால், ஹீதர்..... இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். உள்ளே அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ரத்தம் வேண்டும் என்கிறார்கள். மீண்டும் ரத்தவங்கிக்கு ஓடுகிறார் தீன், இதுவரை 5 லிட்டர் ரத்தம் கொடுத்தாகி விட்டது. தீனுக்கு செத்து விடலாம் போலிருந்தது. ஹீதரின் உடலில் மொத்தமே 5 லிட்டர் ரத்தம் தானே இருக்கும். ஒரு வேளை அவளுக்கு ஏதாவது..... பதட்டத்தில் நடுங்கும் தீன், அவளுக்கு எதுவும் ஆகாது என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார்.
இதற்கு மேலும் ரத்தம் பெற முடியாத நிலையில் மருத்துவர்கள் ஹீதரின் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்தை சுத்திகரித்து மீண்டும் அதை அவளது உடலுக்குள் செலுத்துகிறார்கள். பிரசவ தேதிக்கு 10 வாரத்திற்கு முன்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்ட ஹீதர், குழந்தையை பிரசவித்த போது ஏற்பட்ட அதீத ரத்த இழப்பினாலும், அதற்குப் பின்பு நடந்த அறுவை சிகிச்சையாலும், 6 நாட்கள் கழித்துதான் கண்களையே திறந்தார். எழுந்தவுடன் ஹீதர் கேட்ட முதல் கேள்வி, “என் குழந்தை எங்கே?.....”
கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதிதான், ஹீதரால் தன் குழந்தையைப் பார்க்க முடிந்தது. சாவின் விளிம்பு வரை சென்று விட்டு திரும்பிய ஹீதருக்கு ஆறுதலாய் என்ன சொல்வதென்று தெரியாமல், அவளை அப்படியே அள்ளி முத்தமிட்டார் தீன். தற்போது ஹீதர்(36), தீன்(43), அப்புறம் அவர்களின் குட்டி இளவரசி ஜாஸ்மின் மூன்று பேரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
ஹீதருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுனில் ஜோஷி, தன் 11 வருட அனுபவத்தில் இப்படி ஒரு அரிதான, 9 லிட்டர் அளவுக்கு ரத்த இழப்பை சந்தித்த ஒரு பெண்ணை பார்த்ததே இல்லை என்கிறார்.
செத்துப்பிழைத்து, இந்த உலகிற்கு ஒரு உயிரைக் கொண்டு வரும் தாயால், தாங்கிக் கொள்ள முடியாதது என்ன இருக்கிறது...
0 Comments