ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை தடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை தேர்தல்கள் ஆணையாளர் கவனத்தில்கொள்ளவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியினர் தெரிவித்தனர்.
அலாவுதீனின் அற்புத விளக்கால் செய்யமுடியாததை மஹிந்த செய்துகாட்டினார். எனவே புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் வாக்குறுதிகளையும் செய்துகாட்டுவார் எனவும் கூட்டணியினர் குறிப்பிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதில் கருத்து தெரிவித்த கட்சியின் உறுப்பினர் டிலான் பெரேரா கூறுகையில்,
இந்த நாட்டில் முப்பது ஆண்டுகாலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. விடுதலைப் புலிகளின் பயங்கரவாத போராட்டம் மிகவும் பலமானதாகவே இருந்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவராது என்று நான் திடமான நிலைப்பாட்டில் இருந்தேன். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் புலிகளை முழுமையாக இலங்கையில் அழிக்க முடிந்தது. பிரிவினையின் உச்சத்தில் இருந்த விடுதலைப் புலிகளை முழுமையாக கட்டுப்படுத்தி நாட்டை விடுவிக்க முடிந்தது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரே மஹிந்த எப்படிப்பட்ட தலைவர் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.
அதேபோல் நாட்டில் பலமான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினமான செயலென எண்ணியபோது கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான உர மானியங்களை வழங்க முடியாது என நினைத்த வேளையில் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க முடிந்தது. நாட்டில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய முடியுமா? அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களை முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவை அனைத்தையும் மஹிந்தவால் முன்னெடுக்க முடிந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஆட்சிகாலத்தில் எந்தவித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்தது. அலாவுதீனின் அற்புத விளக்கை வைத்தா இவற்றை செய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சித்தனர். ஆனால் அலாவுதீனின் அற்புத விளக்கால் செய்ய முடியாததை மஹிந்த ராஜபக் ஷ செய்து காட்டியுள்ளார். ஆகவே இப்போது நாம் முன்வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வாக்குறுதிகளையும் முழுமையாக மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியால் செய்து கட்டுவோம்.
டலஸ் அழகப்பெரும
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், எமது உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலான வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதேபோல் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவை இலக்குவைத்து முன்னெடுக்கும் அவதூறு செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடவுள்ளோம். எமது ஆட்சியில் ஊடக அடக்குமுறைகளையும் அடாவடித்தனத்தையும் முன்னெடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்று ஊடக சுதந்திரம் எந்தஅளவில் செயற்படுகின்றது என்பதை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இன்று அனைத்து ஊடகங்களினதும் பிரதானிகளை ரணில் விலைக்கு வாங்கிவிட்டார்.
அவர்களை தனது கைக்குள் வைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை தக்கவைக்கப் பாக்கின்றனர். ஆகவே இவை தொடர்பில் மக்கள் தெளிவுபெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சுசில் பிரேமஜெயந்த
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தனது இரட்டை சதத்தினை பூர்த்தி செய்துள்ளது.தமது இருநூறு நாட்களை கடந்துள்ளனர். ஆனால் இந்த இருநூறு நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு ஆட்சி செய்துள்ளனர் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். வெறும் பொய்களால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகவே மக்கள் தமது தீர்மானங்களை மிகத்தெளிவாக எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments