Subscribe Us

header ads

பிறர் குறை பேசுவதும், ஒற்றுக் கேட்பதும் இஸ்லாத்தில் தடை


இஸ்லாம் சமூக வாழ்வை சீர்படுத்தும் நோக்குடன் சமூகத்தில் ஒருவர் மற்றவருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், உறவாட வேண்டும் என்பதுபற்றி மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைகளை வகுத்துக் காட்டுகின்றது.

குறிப்பாக, ஒருவர் மற்றவரின் குறை தேடுவதுபற்றி பின்வருமாறு குர்ஆன் 
சுருங்கச்சொல்லி விளங்க வைக்கின்றது. “எவருடைய குறைகளையும் நீங்கள் 
துருவித் துருவி விசாரித்துக்கொண்டிருக்க வேண்டாம்.”(49 : 12)

இந்த இறை கட்டளையிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில், 
நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது அயலவரோ, சகோதரரோ, உறவினரோ, நண்பரோ 
ஏதும் குறைகள் விட்டிருப்பின் அந்தக் குறைகள் பற்றி விரிவாக 
பலரிடமிருந்து துருவித் துருவி விசாரித்து வீண் பேச்சுக்களை பேசி 
பெறுமதியான நேரகாலத்தை வீணாக்குவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பூட்டக் 
கூடியது என்பதாகும்.

மேலும், இந்த வெறுப்பூட்டத்தக்க குறைபேசுதல் பற்றிய மற்றுமொரு குர்ஆன் 
ஆயத்தையும் ஈண்டு ஆராய்வது பொருத்தமானது.

“மேலும் விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் அவர்கள் 
செய்யாத (குற்றத்)தைச் செய்ததாகக் கூறி துன்புறுத்துகிறார்களே 
அத்தகையவர்கள் நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் 
சுமந்து கொண்டனர்”(33:58)

இந்தத் திருமறை வசனத்திலிருந்து நாம் மற்றவர்களைப்பற்றி ஆதாரம் 
எதுவுமின்றி வீணாகக் குறைபேசித் திரிந்தால் அது அவர்களை உளவியல் ரீதியாக 
மனதைப் பாதித்து துன்புறுத்துவதாக அமைந்து விடுகின்றது. அவர்கள் தாம் 
செய்யாத குற்றத்தை செய்ததாக எடுத்துக்காட்டி அவமானப்படுத்துவது,

அவதூறாகவும் பகிரங்க பாவமாகவும். இறைவனிடத்தில் கணிக்கப்படுவதால் 
அதைவிட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் உறவுகளை உறுதிப்படுத்துவதில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் 
போதனையும் சாதனையும் எமக்கு எடுத்துக்காட்டாக அமைவதை பின்வரும் நீண்ட 
ஹதீஸ் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

ரஸ¤லுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹ¤ரைரா (ரலி) அவர்கள் 
அறிவிக்கிறார்கள். தவறான எண்ணங்களை விட்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன். 
ஏனெனில், நிச்சயமாக தவறான எண்ணத்தின் மூலம் பேசப்படும் வார்த்தை 
பேச்சுக்களில் மிகவும் பொய்யானதாகும்.

மற்றவர்களின் தவறுகளைத் துருவித் துருவித் தேடாதீர்கள். உலக ஆசையில் 
போட்டிபோட வேண்டாம். தமக்குள் பொறாமை கொள்ள வேண்டாம். தமக்குள் கோபம் 
கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் உங்களுக்கு ஏவியது போல நீங்கள் 
சகோதரர்களாக இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்ய 
மாட்டார். அவருக்கு உதவி செய்வதை விட்டு விடவும் மாட்டார். அவரை 
அற்பமாகக் கருதவும் மாட்டார்.

நெஞ்சைக் காட்டி ‘தக்வா’ இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது எனக் 
கூறிவிட்டு, ஒரு மனிதர் தன் முஸ்லிமான சகோதரரைத் தரக் குறைவாக எண்ணுவதே 
அவர் கெட்டவராக ஆகுவதற்குப் போதுமானது. ஒவ்வொரு முஸ்லிமுடைய இரத்தமும் 
மானமும் அவரின் பொருளும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமாகும். மேலும் நிச்சயம், 
அல்லாஹ் உங்கள் உடல்களையோ உங்களின் தோற்றத்தையோ பார்ப்பதில்லை. உங்கள் 
உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான் எனத் தொடர்ந்து கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நீண்ட நபிமொழியிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமால் 
புறக்கணிக்கப்படாமல், துன்புறுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதும், 
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதும் மிகத் தெளிவாகின்றது. அதனால் 
ஒருவர் மற்றவரைப்பற்றி குறைகூறித் திரிவது முற்றும் தடையானது என்பது 
நிரூபணமாகின்றது.

மற்றுமோர் அறிவிப்பில் ஒருவரை ஒருவர் புறக்கணித்துப் பேசாமல் இருக்க 
வேண்டாம். ஒருவரின் வியாபாரத்தை இரத்து செய்துவிட்டு (தன் பொருளை) விற்க 
வேண்டாம் என வந்துள்ளது.
 
ஒருவர் மற்ற முஸ்லிமின் குறைகளை தேட ஆரம்பிப்பது எத்துணை பாதகமானது 
என்பது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

ரஸ¤லுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக முஆவியா (ரலி) அவர்கள் 
அறிவிக்கிறார்கள். நீர் முஸ்லிம்களின் குறைகளைத் தேட ஆரம்பித்தால் 
அவர்களை நீர் கெடுத்துவிடுவீர். அல்லது கெடுக்க நெருங்கி விடுவீர்.” 
(அபூதாவூத்)

இந்த ஹதீஸிலிருந்து நாம் குறை தேடுவது எத்துணை பாதகமானது என்பது 
தெளிவாகின்றது. இத்தீய பழக்கத்தை முற்றும் ஒழித்துக்கட்டுவதே 
எம்மத்தியில் சகோதரத்துவத்தைக் கட்டி எழுப்புவதற்கு வழிமுறையாகும்.

சகோதரப் பாசம் – உறவு நிலைக்க வேண்டுமாயின் ஒவ்வொருவரும் மற்றவரின் நல்ல 
பண்புகளை மாத்திரம் மெச்சி உறவு கொள்வது சிறப்பாக அமையும். 

இறுதியாக, இந்தக் குறை தேடுதல் பற்றி நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு 
ஹதீஸ் கவனிக்கத்தக்கது.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒருவர் கொண்டு வரப்பட்டார். அவருடைய 
தாடியிலிருந்து மதுபானத் துளிகள் விழுகின்றன எனக் கூறப்பட்டது.

அதற்கவர்கள் நாம் குறைகளைத் தேடுவது விட்டும் தடுக்கப்பட்டுள்ளோம். 
எனினும் எங்களிடம் ஏதும் தவறுகள் வெளியானால் அதற்குத் தண்டனை வழங்குவோம் 
என்று கூறினார். (ஆதாரம் அபூதாவூத்).

எனவே, முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாத்தின் சமூக வாழ்க்கை முறையை நன்கு 
அறிந்து, மற்றவர்களுடன் நல்லுறவு பூண்டு, குறை தேடுதல், ஒட்டுக் கேட்டல், 
குற்றங்காணல் போன்ற தடுக்கப்பட்ட செயல்களை துறந்து நல்லவற்றை நாடி நன்மை 
பெறும் நோக்குடன் சமூக உறவுகளை ஏற்படுத்தி யாவரும் சகோதரர் களாக வாழ 
முயற்சிப்போமாக.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி..dahwaworld .com 

Post a Comment

0 Comments