Subscribe Us

header ads

யோஷித ராஜபக்சவின் 150 மில்லியன் ரூபாவுக்கு நாமம் போட்ட நபர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச, அலரி மாளிகைக்கு பிரியாணி விநியோகித்ததாக கூறப்படும் ஒருவரிடம் 150 மில்லியன் ரூபாவை கொடுத்து அதனை திரும்பபெற முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்தினர் அலரி மாளிகையில் வசித்து வந்த காலத்தில் அவர்களுக்கு டுபாய் பாய் என்று அழைக்கப்படும் முஸ்டாக் பாய் என்பவர் பிரியாணி விநியோகித்து வந்துள்ளார்.

தற்போது அவர் ராஜபக்ச குடும்பத்தினரை வசைபாடி வருவதுடன் அந்த குடும்பத்தினர் நாட்டை அழித்து விட்டதாக குறை கூறி வருவதாக கொழும்பு வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ராஜபக்ச புதல்வர்களான நாமல், யோஷித்த மற்றும் ரோஹித்த ஆகியோர் தமது கோடிக்கணக்கான பெறுமதிமிக்க சபாரி, லம்போகினி மற்றும் மார்டின் ரக கார்களை பாதுகாப்பு கருதி முஸ்டாக் பாயின் வீட்டுக்கே அனுப்பி வைத்தனர்.

கடந்த 10 வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரியாணி வழங்கிய முஸ்டாக் பாய் என்பவர் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளதுடன் ராஜபக்சவினரின் பெருந்தொகை பணத்தை ஏமாற்றியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தேர்தல் தோல்வியடைந்து அவசரமாக தமது பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டு அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்சவினரை சந்திக்க அன்று முஸ்டாக் பாய் அலரி மாளிகைக்கு சென்றிருந்தார்.

முஸ்டாக் பாயை கண்ட யோஷித்த ராஜபக்ச, அவரது கையை பிடித்து அலரி மாளிகையில் இருந்த தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்ற யோஷித்த ராஜபக்ச தான் பொதி செய்து வைத்திருந்த 150 மில்லியன் (1500 லட்சம்) ரூபாவை கொடுத்து அதனை பாதுகாப்பாக வைக்குமாறு தான் பின்னர் அதனை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அலரி மாளிகையில் இருந்த பணியாளர்களின் உதவியுடன் முஸ்டாக் பாய் தான் வந்த வாகனத்தில் பணத்தை ஏற்றியதுடன் அதனை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கொண்டு சென்ற பணத்தை தன்னிடம் மீண்டும் வழங்குமாறு யோஷித்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்டாக் பாயிடம் கேட்டுள்ளார்.

பெருந்தொகை பணம் என்பதால், அதனை வீட்டில் வைத்திருக்க முடியாத காரணத்தினால் வர்த்தகத்தில் முதலீடு செய்து விட்டதாக முஸ்டாக் பாய் யோஷித்தவிடம் கூறியுள்ளார்.

அப்படியானால், பணத்தை எப்போது திரும்ப பெற முடியும் என யோஷித்த கேட்டுள்ளார். வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளதால், இலாபம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி விடுவதாக முஸ்டாக் பாய் கூறியுள்ளார்.

இந்த பதிலால் கடும் ஆத்திரமடைந்த யோஷித்த ராஜபக்ச, முஸ்டாக் பாயை தாக்க முயற்சித்துள்ளார். யோஷித்தவின் நண்பர்கள் அவரை கட்டுப்படுத்தி கொண்டனர்.

அதற்கிடையில் முஸ்டாக் பாய் அங்கிருந்து நழுவி சென்று விட்டார்.

இந்த நிலையில், முஸ்டாக் பாய் இந்த சம்பவம் குறித்து மேமன் சமூகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ராஜபக்சவினர் நாட்டை அடகு வைத்த கொள்ளை கூட்டம் என கூறியுள்ள அவர், தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ராஜபக்ச குடும்பமே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சவினர் தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முன்னர், அவர்களை பற்றிய முழுமையான தகவல்களை வெளியிட முஸ்டாக் பாய் தயாராகி வருவதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments