மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று(10) செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் செல்லாது பாடசாலை சீருடையுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மடுக்கரை கிரைமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றிற்கும் அதிகமான மாணவர்கள் நானாட்டான் ம.வி பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.
நானாட்டானில் இருந்து மடுக்கரை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி பாதீப்படைந்துள்ளமையினால் நானாட்டானில் இருந்து மடுக்கரை கிராமத்திற்கான அரச,தனியார் போக்குவரத்துச் சேவைகள் பல மாதமாக தடைப்பட்டுள்ளது.
வீதிகள் பாரிய குண்றும் குழியுமாக காணப்படுவதோடு போக்கு வரத்துச் சேவைகள் இடம் பெற முடியாத வகையில் குறித்த வீதி காணப்படுகின்றது.
போக்குவரத்துச் சேவைகள் இல்லாமையினால் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றிற்கும் அதிகமான மாணவர்கள் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து பாடசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பில் மடுக்கரை கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள்,மடுக்கரை கிராம மாணவர்கள், நானாட்டான் ம.வி பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோர் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு கோரி நானாட்டான் பிரதேசச் செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகியோரிடம் பல தடவை நேரடியாகவும்,எழுத்து மூலமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
-எனினும் குறித்த வீதி உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை.
இதனால் குறித்த கிராமத்திற்கான போக்குவரத்துச் சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்தது.
-இதனால் மடுக்கரை கிராம மக்கள் உற்பட அக்கிராம மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததோடு மடுக்கரையில் இருந்து நானாட்டான் பகுதிக்கு நடந்து வரும் நிலை ஏற்பட்டது.
-இந்த நிலையில் நானாட்டானில் இருந்து மடுக்கரை கிராமத்திற்குச் செல்லும் வீதியை புனரமைத்து போக்கு வரத்து வசதிகளை உடன் ஏற்படுத்தித்தருமாறு கோரி மடுக்கரை கிராமத்தில் இருந்து நானாட்டான் ம.வி பாடசாலைக்குச் செல்லும் சுமார் நூற்றுக்கனக்கான மாணவர்கள் இன்று(10) செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் செல்லாது பாடசாலை சீருடையுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை 10 மணியளவில் நானாட்டான் பஸார் பகுதியில் ஒன்று கூடிய மாணவர்களும் அவர்களது பெற்றோரும் நானாட்டான் பிரதேசச் செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதன் போது மாணணவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.
-பின் நானாட்டான் பிரதேசச் செயலாளர் அங்கு இல்லாத காரணத்தினால் தமது பிரச்சினைகளை கூறி அதிகாரிகளிடம் மகஜர் கையளித்தனர்.
-பின் ஊர்வலமாக சென்று மாணவர்கள் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் அவர்களிடம் தமது பிரச்சினைகளை கூறி மகஜர் கையளித்தனர்.
இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் றீகன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச சபையின் தலைவர் உடனடியாக இவ்விடையம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள்,மற்றும் பெற்றோர் அவ்விடத்தில் இருந்து சென்றனர்.







0 Comments