நேற்று தவக்காலத்தின் முதல் நாள். உலக கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள். விபூதிப் புதன் தொடக்கம் நாம் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூர ஆரம்பிக்கின்றோம்.
'மண்ணிலிருந்து உலகில் பிறந்த மனிதா... நீ மண்ணுக்கே தான் திரும்ப வேண்டும் ஒருநாள்' என்ற அடிப்படையில் இன்று திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையும், திருநீறை நம் நெற்றியில் பூசுகின்றார். தவக்காலத்தின் திரு அடையாளாமாக இது விளங்குகின்றது.
கடந்த வருடம் குருத்தோலை ஞாயிறு நாளில் ஆலயத்தில் வழங்கப்படும் தென்னங்குருத்தில் செய்யப்பட்ட சிலுவைகளை வீடுகளிலிருந்து பெற்று ஆலயத்தில் அவற்றை எரித்துப் பெறப்படும் சாம்பலே இன்றைய நாளில் நெற்றியில் பூசப்படுகிறது.
என் மீட்பர் இரத்தம் சிந்தினார் ; நான் பரிசுத்தமானேன், அவர் எனக்காக மரித்தெழுந்தார் ; நான் மறுரூபமானேன் - இதுதான் நாம் இன்றைய நாளில் நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டிய சிந்தனை.
ஆம்... நமக்காக இயேசு இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார், பாடுகளை ஏற்றார், மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்...இதுதான் தவக்காலத்தில் நாம் சிந்திக்க வேண்டிய தியானம். நம்மிடம் இயேசு கேட்பது, அது மன மாற்றம். நம் மனதின் அழுக்கைக் களைந்து விட்டு, முழுமையாக பரிசுத்தமடைய வேண்டும்,பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.
அதைவிட்டு, தவக்காலத்தில் மட்டும் ஒறுத்தல் செய்து, பரிசுத்தவானாக வாழ்ந்துவிட்டு, மீண்டும் செய்த தவறையே செய்ய ஆரம்பிப்பதல்ல. தவக்காலத்தின் நாற்பது நாட்களும் நாம் என்ன செய்கின்றோம்..? பாவம் செய்யக் கூடாது.... ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதானே நினைக்கின்றோம்.
சிலர் மது பாவனையை இந்த நாற்பது நாட்களும் விட்டுவிடுவார்கள்.. ஆனால், உயிர்த்த ஞாயிறன்று ஒட்டு மொத்தமாக மது அருந்தி தமது தவக்காலத்தை முடித்துக் கொள்வார்கள்.
அதே போன்று, சிலர் தவக்காலத்தில் நாள்தோறும், திருப்பலி ஒப்புக் கொடுப்பார்கள். ஆனால், உயிர்த்த ஞாயிறு முடிந்ததும் அதைக் கைவிட்டு விடுவார்கள். அயலவருடன் சண்டை சச்சரவில்லாமல் சமாதானமாக இருப்பார்கள். ஆனால், தவக்காலம் முடிந்ததும், பழையபடி அயலவருடன் மோத ஆரம்பித்து விடுவார்கள்.
இதுவல்ல, கிறிஸ்து எதிர்பார்க்கும் மன மாற்றம். நாம் முழுவதுமாக பாவத்திலிருந்து விடுபட்டு, வாழ்நாள் முழுவதும் நல்ல கிறிஸ்து + அவனாக - அவளாக வாழ வேண்டும் என்பதைத்தான்.
எனவே, இன்றைய நாளில், திருநீறை எமது நெற்றியில் பூசிக் கொண்ட நாம், இன்றிலிருந்து எம்மை எம் பாவ வாழ்விலிருந்து மீட்டெடுப்போம். எமக்கு இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமல்ல. நம் உயிர் கூட...! எந்த நேரமும் எம்மை மரணம் ஆட்கொள்ளலாம்...மண்ணுக்கே திரும்பலாம்...நாம் வாழும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாவம் செய்யாதிருக்க முயற்சிப்போம்.
கிறிஸ்துவின் பணிவாழ்வை பின்பற்றி அவருடன் ஒப்புரவாக, இன்றைய நாளில் உறுதி கொள்வோம். தவக்காலத்தை முன்னெடுப்போம்.
0 Comments