வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ஒருவரது வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் மற்றும் நீலப் படையணியின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் என்பவற்றை செவ்வாய்கிழமை மாலை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியிலுள்ள அமைப்பாளர் வீட்டில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த அமைப்பாளரின் வீட்டை சோதனையிட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த அமைப்பாளரின் வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் 52, நீலப்படையணியின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் 520 என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பொருட்களை புதன்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 Comments