கிழக்கு மாகாண கல்விப் புலத்தின் சட்ட ஆட்சிக்கான சட்டமுறிவுகள் பொறுப்புக் கூறலுடன் நல்லரசாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகங்களுக்கு புதிய அரசாங்கத்தில் இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்திக் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது! “பொறுப்புடமை ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிலை சட்ட விதிகளை மதித்தல் சனநாயக சமூகம் ஒன்றிலுள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற உயர்ந்த பண்புகள் மதிக்கப்பட்டு கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் திறமையானதும் பயன் தருவதுமான நிருவாகக் கட்டமைப்பும் நல்லாட்சியும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
கடந்த கால கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் சட்ட விதிகளுக்கு முரணாக நியமிப்புகள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தனை இலங்கை ஆசிரியர் சங்கம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் மாகாண ஆளுநர் வகை சொல்லலுடன் கூடிய நல்லாட்சியை உறுதிப்படுத்தவில்லை.
முறையற்ற விசாரணை மூலம் கல்விப்புலத்தில் உள்ளவர்களும் தொழில் சங்க உறுப்பினர்களும் பழிவாங்கப்பட்டதோடு கருத்துச் சுதந்திரம் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிழக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் காணப்பட்டனர்.
பல கல்வி அதிகாரிகள் மற்றும் முறையற்ற நியமிப்புக்கள் வழங்கப்பட்ட அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் சட்ட விதிகளுக்கு முரணாக அரசியல் நிரல்களையும் பணிப்புரைகளையும் செயற்படுத்தும் முகவர்களாகச் செயற்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதோடு இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.
கல்வித் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நடைபெற்ற ஊழல்கள் இலஞ்சம் பெறல் போன்றன பொறுப்புக் கூறலுடன் சட்டத்தின் முன் கொண்டுவரப்படல் வேண்டும்.
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு அரசியலமைப்பின் 17வது திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஊடாக நல்லரசாட்சி உறுதிப்படுத்தப்பட்டு சிறுபாண்மை மக்களின் உள்ளக சுய நிர்ணய உரிமைகள் மலர்ந்துள்ள புதிய அரசினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments