ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை என கருப்பு பெட்டி தகவலில் தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது, இது தீவிரவாதிகளின் சதியா? என்ற பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்துள்ளது.
எனவே விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான மர்மம் தெரியவரும் என கருதப்பட்டது.
அதன்படி விமானத்தின் உடைந்த பாகங்களுடன் கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டதுடன், அதில் உள்ள ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ (ஒலி இழை) பரிசோதிக்கப்பட்டது.
ஆனால் அதில் விமானிகளின் குரல் தவிர வேறு நபர்களின் குரல்கள் எதுவும் பதிவாகததால், ஏர் ஏசியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி தாக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இத்தகவலை இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய அதிகாரி ஹனான்டோ (Hananto)தெரிவித்துள்ளார்.


0 Comments