Subscribe Us

header ads

மதத்தை பின்பற்றும் உரிமையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் - ஜனாதிபதி மஹிந்த


ஒருசில இனவாத மற்றும் மதவாத குழுக்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக மோதல்களை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக “மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி” தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

அவ்வாறான மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பாதுகாக்கவும் மதத்தை பின்பற்றும் உரிமையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தனது விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எஞ்சிய மக்களின் மீள்குடியேற்றம், சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் விடுதலை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு நல்லிணக்க செயற்பாடுகளை துரிதப்படுத்த இடைக்கால நிரந்தர செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமாதான நல்லிணக்கத்தின் பயன்களை மக்களுக்கு வழங்குவது தொடர்பான 20 ஆவது பிரிவிலே ஜனாதிபதி இது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்
குறிப்பிட்டுள்ளதாவது,

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இதுவரை வழக்கு தொடரப்படாத சகல வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கும் எதிராக வழக்கு தொடரவோ அல்லது தொடராதிருப்பது குறித்து ஆராய்ந்து தாமதமின்றி நடவடிக்கை எடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சகல அதிகாரங்களும் கொண்ட குழுவொன்றை நியமிப்பேன்.

உலகில் எந்த நாடும் செய்திராத வகையில் வரலாற்றில் முதல் முறையாக மனிதாபிமான நடவடிக்கையின் போது பொதுமக்கள் விட்டுச் சென்ற வாகனங்களையும், மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளையும் உரியவர்களிடம் மீள கையளிக்கும் நடவடிக்கையை இந்த வருடத்தினுள் பூர்த்தி செய்வேன். பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் பயன்படுத் தப்பட்ட காணி, கட்டடங்களை மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை இதுவரை பெருமளவு நிறைவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் எஞ்சியுள்ளதை குறிப்பிட்ட காலப் பகுதியினுள் ஒப்படைப்பேன்.

பயங்கரவாத நடவடிக்கைகளால் சில காலம் பிரதான அபிவிருத்தி கட்டமைப்பில் இருந்து தூரமாகியிருந்த வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணையான பங்காளர்களாக பங்களிப்புச் செய்வதற்கு சமூக உள்வாங்கல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளை துரிதப்படுத்த இடைக்கால கட்டமைப்பினுள் நிரந்தர செயற்திட்டமொன்றை முன்னெடுப்பேன்.

எதிர்வரும் வருடங்களில் தேசத்துக்கு மகுடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.நாட்டின் எப்பாகத்திலாவது பயங்கரவாதம் காரணமாக இடம்பெயர்ந்த எந்த இனப்பிரிவினரோ அல்லது நஷ்டஈடு கிடைக்காத குடும்பங்களோ இருந்தால் அவர்களுக்கு உரித்தான நஷ்டஈட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மற்றும் முகாம்களில் இருக்கும் சிங்கள, தமிழ், அல்லது முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தி அவர்கள் அனைவரையும் தமக்கே உரித்தான வீடுகளில் குடியிருக்கும் உரிமையை தாமதமின்றி பெற்றுக் கொடுப்பேன். துரதிஷ்டமாக ஒரு சில இனவாத, மதவாத குழுக்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக மோதல்களை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அவ்வாறான மோதல்களுக்கு இலக்காகியுள்ள சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர்களை பாதுகாக்கவும் மதத்தைப் பின்பற்றும் உரிமையை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுப்பேன். தோட்டப் பகுதிகளில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களுக்கு தமக்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. அதனால் அந்தப் பிரிவுகளை மீளமைக்க நடவடிக்கை எடுப்பேன். நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள கல்வி, சுகாதார வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதிகளை சம அளவாக முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

Post a Comment

0 Comments