இன்னும் இரண்டரை மாதங்களில் ரபிஉல் அவ்வல் மாதம் பிறக்கும். அதனுடன் சேர்ந்து மீலாதுன் நபி விழாவும் வரும். அதனை அடிப்படையாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் பல ஊர்களில் நடைபெறும். அவை சரியா? பிழையா? என்று விவாதிப்பது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அதற்கும் அப்பால் செல்லும் ஒரு யோசனையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இதுவொரு முன்மொழிவு. முடிவு அல்ல. அப்படி என்னதான் எழுதியிருக்கிறேன்? வாருங்கள், கட்டுரைக்குள் செல்வோம். வாசித்துவிட்டு கலந்துரையாடுவோம்.
நேர்ச்சைக் கடன் தினம். அமெரிக்கா, கனடா, கரீபியத் தீவுகள் உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய நாடுகள் தவிர்ந்த ஆசிய மண்டல நாடுகளில் அறிமுகம் இல்லாத ஒரு நாள். இந் நாடுகளில் விடுமுறை நாளாக அனுஷ்டிக்கப்படும் இத் தினம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் இடம்பெறும்.
இத் தினத்தின் சுருக்க வரலாறு அவ்வாறு இருக்க, கனடாவில் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் நேர்ச்சைக் கடன் தினத்தில் (2014.10.13) அந்நாட்டு முஸ்லிம்கள் கொடுத்த கந்தூரி எமது கவனத்தை ஈர்க்கின்றது.
"நாம் அவர்களின் இனம், சமயம், தேசியம், குடும்பம் என்று எதனையும் பாரபட்சம் பாராமல் எல்லா சமூக மக்களுக்கும் விருந்தளித்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம்" எனக் கூறுகின்றார் முஹம்மத் இக்பால் அலி, Muslim Welfare Centre ஸ்தாபகர் முஹம்மத் அப்பாஸ் அலியின் மகன்.
நூற்றுக்கும் அதிகமான டொரண்டோ மாநகரின் Regent Park குடியிருப்பாளர்கள் Muslim Welfare Centre-னால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வில் பகிரப்பட்ட ஹலால் உணவைப் பெற்றுக்கொள்வதற்காக Christian Resource Centre Park-இல் ஒன்றுகூடினர்.
விருந்தினரை வரவேற்பதிலும் உணவு பரிமாறுவதிலும் ஈடுபட்ட தொண்டர்கள், அவர்களுடன் உரையாடியதோடு கேலிப் பேச்சுக்களினால் மகிழ்வூட்டினர். கோழி, சோறு, பான், சலாத் கீரையுடன் ஹலால் முறையில் தயாரிக்கப்பட்ட உணவு விருந்தினருக்கு பகிரப்பட்டது.
நேர்ச்சைக் கடன் தினம் கிரிஸ்தவக் கலாசார பின்னணியுடன் தோற்றம்பெற்றாலும் இன்று அனைத்து சமயத்தவர்களாளும் விடுமுறை நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
Muslim Welfare Centre: பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜராக கடமையாற்றிய அப்பாஸ் அலியும் மனைவி சர்வர் ஜஹான் பேகமும் 20 வருடங்களுக்கு முன் MWC-ஐ ஸ்தாபித்தனர். கடந்த 14 வருட காலமாக MWC-னால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டொரன்டோ ரீஜன்ட் பாக்வாழ் வறியவர்களுக்கும் வீடற்றவர்களுக்கும் பகல் உணவு (பொதிகள்) வழங்கப்படுகின்றது. பனிக் காலத்தில் குளிர் தாங்கும் ஆடைகளும் வழங்கப்படுகின்றது.
கனடாவின் 32.8 மில்லியன் சனத்தொகையில் முஸ்லிம்கள் 2.8% ஆகும். கிரிஸ்தவம் அல்லாத இரண்டாவது பெரும்பான்மை சமயமாக இஸ்லாம் விளங்குகின்றது. கனடா முஸ்லிம்கள் அந்நாட்டின் கல்வித் துறையில் முன்னணியில் திகழுவதை அன்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கை நிலை: நேர்ச்சைக் கடன் தினம் பற்றிய குறிப்பு அவ்வாறு இருக்க, இலங்கையில் நமது நிலையை சீர்தூக்கி பார்ப்போம்.
இன்னும் 2 - 2 1/2 மாதங்களில் முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கும் காலம் வருகின்றது. அதுதான் 'மீலாதுன் நபி'. முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை அடிப்படையாக வைத்து பல நிகழ்வுகள் முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறும். அதில் ஓர் அம்சமாக 'கந்தூரி' என்ற அன்னதானம் வழங்குவதும் இடம்பெறும்.
மீலாதுன் நபி விழா, மௌலூது பாடல், கந்தூரி ஆகியவை தொடர்பான இரு பக்கக் கருத்துவாதங்கள் ஒரு புறமிருக்க, இச் சந்தர்ப்பத்தை முஸ்லிம்களுக்கும் சகோதர பெரும்பான்மை இனத்தவருக்கும் இடையிலான உறவுப் பாலத்தை புனருத்தாபனம் செய்வதற்காக பயன்படுத்தலாம் என்பது கவனத்திற்குறியது.
பொதுவாக, முஸ்லிமகள் செரிந்து வாழும் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறுவதினால், இக் கந்தூரிகள் முஸ்லிம் மத்தியிலான உணவுப் பரிமாறலாகத்தான் கணிக்கப்படுகின்றது. 'மாட்டிறைச்சி இன்றேல் கந்தூரி இல்லை' என்ற முஸ்லிம்களின் உணவுப் பழக்கம் குறிப்பாக பெருன்பான்மை பௌத்தர்களை கந்தூரியில் கலந்துகொள்வதை விட்டும் தூரப்படுத்தியுள்ளது எனலாம். எனவே, எனவே, கந்தூரி ஏற்பாடுகளில் சாத்தியப்பாடான மாற்றம் தேவைப்படுகின்றது.
சகோதர சமூகத்தவரும் கலந்துகொள்ளக் கூடியதாக, அவர்களின் பங்களிப்பையும் பெறக்கூடியதாக 'கந்தூரி'யை ஏற்பாடு செய்வதின் ஊடாக, முஹம்மத் நபியவர்களைப் பற்றியும் இஸ்லாம், முஸ்லிம்களின் நம்பிக்கைகள் பற்றிய தகவல்களையும் பரிமாறுவதற்கான வாய்ப்பாக்கலாம்.
இது, இக் கட்டுரையாளனின் தனிப்பட்ட முன்மொழிவு. இவ்வாறான முயற்சிகளின் சாதக, பாதக நிலைமைகளை சமூக மட்டத்தில் கலந்துரையாடுவோம். நன்மை இருந்தால் செயல்படுத்துவோம், இன்ஷாஅல்லாஹ்.
(ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்)
0 Comments