-எம்.ஏ.எம். நிலாம்-
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி அரசியல்
நடத்திப் பார்க்கவேண்டுமென உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சரும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் முஸ்லிம்
காங்கிரஸுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். இதனை யதார்த்தபூர்வமாக
சிந்திப்பதாகவும் காலம் கடத்துவதைவிட இப்போதே செய்வதையே தான்
விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது "சோர்விலா சொல்' என்ற பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு
விழாவில் ஏற்புரையாற்றும்போதே பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தனது
நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி
மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு
விழாவுக்கு முஸ்லிம் கவுன்சில் தலைவரும் நவமணி பத்திரிகை ஆசிரியருமான
எம்.என். அமீன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் பசீர் சேகுதாவூத்
தொடர்ந்து கூறியதாவது:
பாராளுமன்றத் தேர்தல் வரையோ, ஜனாதிபதி தேர்தல் வரையோ நாம் காத்திருக்க
வேண்டிய அவசியமில்லை. எதிரணி அரசியல் செய்ய வேண்டுமானால் அதை இப்போதே
செய்யலாம். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கின்றேன். எதிரணிக்குச்
செல்வதென்பதை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சரணாகதியடைவதாகக் கருதக்கூடாது.
அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டுமானால் அதற்குரிய நல்ல தருணம்
இதுதான். தேர்தல் வந்த பின்னர் அதனைச் செய்ய முடியாது. வெகுஜன விரோதிகள்
எல்லோரும் யதார்த்தவாதிகளல்ல. ஆனால் யதார்த்தவாதிகள் வெகுஜன விரோதிகள்
என்பது உண்மை. அதனடிப்படையிலேயே உண்மைகள் வெல்வதில்லைஅவை
நிரூபிக்கப்படுகின்றன எனும் சொற்றொடரைப் பாவித்துள்ளேன்.
ஒரு விடயத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காக நானும் ஏற்க
வேண்டுமென்ற நிலைப்பாட்டை நான் ஒருபோதும் ஏற்கவில்லை. அதற்காக நான்
எதிர்க்கப்போவதுமில்லை. மௌனமாக இருந்துவிட்டுப் போவேன். தலைவருடன்
எப்போதும் நெருக்கமாகவே செயற்பட்டு வந்துள்ளேன். ஆனால், எனது கருத்துக்களை
சொல்வதிலிருந்து நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை. நான்
யதார்த்தவாதியா? இல்லையா? என்பதற்கு காலம் பதில் சொல்லட்டும் எனத்
தெரிவித்தார்.
0 Comments