அரச புலனாய்வு சேவையில்
உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என பொது
பல சேனா அமைப்பு சமூக வலைத்தள பிரச்சாரம் ஒன்றை முடுக்கிவிட்டுள்ளது.
பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் ஜயசிங்க தனது சமூக
வலைத்தள பதிவு ஒன்றில் “இராணுவ புலனாய்வு சேவையில் உள்ள முஸ்லிம்
அதிகாரிகள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர்” எனக்
கூறியுள்ளார். இந்த பதிவு பொது பல சேனாவின் ஆதரவாளர்களால் அதிகமாக
பகிரப்பட்டுள்ளது.
புலனாய்வு சேவையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகள் நாட்டை மெது மெதுவாக ஜிஹாதை
நோக்கி அழைத்துச்செல்கின்றனர். இந்த பிரச்சினையின் பாரதூரத்தை அரசு உணரத்
தவறியுள்ளதாக பொது பல சேனா கூறியுள்ளது.
முஸ்லிம் அடிப்படை வாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட சில முஸ்லிம் சிரேஷ்ட
புலனாய்வு அதிகாரிகள் சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்
சுமத்தும் பொது பல சேனா இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் எதனையும்
கொடுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
ஈழ யுத்தத்தின் இறுதி தறுவாயில் LTTE அமைப்பின் புலனாய்வு கட்டமைப்பை
சிதைத்ததில் முஸ்லிம் புலனாய்வு அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த
அதிகாரிகளின் தமிழ் மொழித்தேர்ச்சி இந்த வகையில் இலங்கை இராணுவத்துக்கு
மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
கேணல் பைசால் லாபீர் மற்றும் கேணல் முத்தலிப் போன்றோர் இலங்கை இராணுவ சேவையில் முக்கியம் வாய்ந்த முஸ்லிம் அதிகாரிகள் ஆவர்.
பொது பல சேனாவின் இந்த குற்றச்சாட்டு பற்றி கருத்து கேட்க இராணுவ பேச்சாளர்
பிரிகேடியர் றுவான் வணிகசூரியவை ஆசியன் மிரர் தொடர்பு கொள்ள எடுத்த
முயற்சி பலனளிக்கவில்லை.
இலங்கை இராணுவத்தின் புலனாய்வு கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக
இராணுவ பேச்சாளர் கூறிய மறுதினம் பொது பல சேனா இந்த குற்றச்சாட்டை
முன்வைத்தமை இங்கு குறிப்பிட தக்கது

0 Comments