Subscribe Us

ஞானசார தேரருடனான, விவாதம் ஹராமானதா..?

இன்று எமது சமூகத்தில் உள்ள அனைவரும் அமைதியாக வாழ வேண்டும், பல்லின சமூகம் வாழ்கின்ற நாட்டில் நாம் எப்படி வாழ வேண்டும், பழக வேண்டும் என்றும் இந்த நாட்டில் சக வாழ்வு வாழ்வதுடன் முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறுகின்ற முறையில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், அரசியல் அதிகாரத்துடன் பலம் கொண்ட ஒரு சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் நாம் இஸ்லாமிய அரசியல் வரலாற்றை அறிந்தும் செயல்படாதவர்களாகவே இருக்கின்றோம். இன்று உலகில் அமெரிக்கா இஸ்ரேல் உட்பட மேற்கின் அனைத்து நாடுகளும் இஸ்லாமிய அரசியல் வரலாற்றை நன்கு அறிந்தவர்களாகவும், அதனூடாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்களாகவும் இருப்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முழு உலகமுமே இஸ்லாமிய அரசியலை செயல்படுத்தாவிட்டாலும் அந்த அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருப்பதைப் பார்க்கின்றோம். 

இஸ்லாம் காலத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றதாக நடந்து கொள்ளும்படி சொல்லியிருப்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மேலும் எமக்குள் ஏற்படும் பிரச்சினைகளின் போது கூறப்படுகின்ற விடயங்களைக் கூட பொருட்படுத்தக் கூடாது என இஸ்லாம் எமக்கு போதித்துள்ளதை நாம் அறிவோம். ஒருவர் கோபத்துடன் இருக்கும் போது சொல்லும் வார்த்தை தீர்ப்பாக எடுக்கப்பட மாட்டது என்பதையும் அறிவோம். அந்த வகையில் இன்று எமது சமூகத்தை மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசுவதையும், எமது உயிரிலும் மேலான நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இல்லாத பொல்லாத பொய்களைச் சொல்லி முஸ்லிம் சமூகத்தின் மனதைப் புண்படுத்திக் கொண்டிருக்கும் இந்த பொது பல சேனா அமைப்பு விடும் விவாதத்துக்கு, எமது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஆவேசப்படாமல் மிகவும் பொறுமையாக  இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது இஸ்லாமிய நெஞ்சங்களே! எமது சமூகத்தில் பல கொள்கைகள் இருப்பதை நாம் அறியாதவர்களா?!! அவர்களுடன் விவாதம் செய்வதில் எமக்குப் பல விடயங்களை அறிந்து கொள்ளவும் தெளிவு பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்நிய சமூகத்தவர்களுடன் (ஈமான் இல்லாத) விவாதிப்பதிலோ, தர்க்கம் செய்வதிலோ எந்தப் பிரயோசனமும் எமக்குக் கிடைக்கப் போவதில்லை. ஆகவே நாம் ஞானசார தேரருடன் விவாதிக்கப் போக வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே அவருடன் (ஞானசார தேரருடன்) விவாதிக்கப் போக வேண்டுமென்றால், இந்த நாட்டின் சட்டத்தில் இடமிருக்குமாக இருந்தால் அல்லது அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமாக இருந்தால், இலங்கையில் உள்ள பிரதானமான ஒரு நீதிமன்றத்தில் இந்த விவாதத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாகவும், அனைத்து சமூகங்களுக்கும் ஒரு வரலாற்றுப் பாடமாக அமைவதாகவும் இருக்கும். இது மிகவும் தூரநோக்குடன் செயல்பட வேண்டிய ஒரு விடயமாகும். இன்றைய சூழ் நிலையில் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் உயர் நீதியரசர்களை நடுவர்களாக உள்வாங்கி அவர்கள் மூலமாக இந்த விவாதத்தை மேற்கொள்ள முடியுமாக இருந்தால் அது தான் இராஜதந்திரமான செயலாகும். மாறாக எமது சமூகம் விவாதத்துக்கு உடன்பட்டு ஞானசார தேரருடன் விவாதிக்கச் சென்றால், அது எமது சமூகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும், அரசியல் தலைமைகளுக்கும், சாதாரண பொதுமகனுக்கும் பெரும் பிரச்சினையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. எமது சமூகம் புல் மேய்கின்ற ஆடுகளைப் போன்ற ஓரினமாகக் காட்டப்படும்.

1915 – 2015 நூற்றாண்டை அவர்களின் திட்டப்படி செயல்படுத்த பொது பல சேனா அமைப்புக்குக் கிடைத்த பெரும் வெற்றியாக இந்த விவாதம் அமைய வாய்ப்பு உண்டு. இந்த நாட்டில் எமது சமூகத்துக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதில் சிலவற்றை நீதிமன்றம் கொண்டு சென்று அதற்கான சரியான தீர்ப்பினைப் பெற்றுக் கொண்டதையும் நாம் அறிவோம். இன்னும் பல பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் சென்று தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

நாம் முஸ்லிம்கள்! இந்த நாட்டைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய முறைப்படி சரியான சட்டதிட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்த அழிந்து போகக் கூடிய இம்மையில் நாம் வாழ்வதற்கான ஒரு சட்டம் காணப்படுகின்றது (ஷரீஆ); ஒரு நீதிமன்றம் இருக்கின்றது. இந்த நீதிமன்றம் தான் இன்றைய காலகட்டத்தில் இந்த விவாதத்துக்கு நடுவராக வரவழைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடே சாலச் சிறந்ததாகும் என்பது எனது கருத்தாகும்.

குறித்த முஸ்லிம் தலைவர்களும் பொது பல சேனா அமைப்பினரும் ஈடுபடவிருக்கும் விவாதத்திற்கு இந்த நாட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நடுவர்களாக செயல்பட்டால், இந்த நாட்டின் நீதித் துறைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மீறல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும்,  மேலும் இந்த நாட்டின் மேல் தப்பெண்ணம் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின்  நல்லெண்ணத்தைப் பெற்றெடுக்கவும் இந்த விவாதம் உதவியாக இருக்கும்  என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதற்கு அரசாங்கம் முன்வராது. ஆகவே எமது சமூகமும் விவாதத்திற்குப் போக வேண்டியதில்லை. 

Post a Comment

0 Comments