Subscribe Us

header ads

இன்று மஹா சிவராத்திரி

சிவராத்திரி விரதம் இந்துக்களால் இன்று (27) அனுஸ்டிக்கப்படுகிறது.

சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற தொடர்மொழி ‘பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு’எனப் பொருள்படும்.

இது ஆண்டு தோறும் மாசி மாதத்தின் தேய்பிறை பதினான்காம் திகதியில் அதாவது கிருஷ்ணபக்ஷ்த்துச் சதுர்த்தசியில் வரும் விரதம் ஆகும். மஹா சிவராத்திரி விரதம், பூஜைகள் யாவும் இன்று வியாழக்கிழமை (27) சூரிய உதயத்துடன் ஆரம்பமாகி நாளை (28) வெள்ளிக்கிழமை காலை வரையான காலமாக கொள்ளப்பட்டு வருகின்றது.

உலகம் முழுவதும் வாழும் இந்து மக்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு விரதமிருந்து விடிய விடிய இறை சிந்தனையுடன் மனதை ஒரு நிலையப்படுத்துவது போல மஹா சிவராத்திரி தினத்திலும் சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடல் அவசியமானதாகும்.

சிவ தலங்களிலும் ஏனைய ஆலயங்களிலும் இரவு நான்கு ஜாமங் களிலும் இடம்பெறும் பூஜைகளில் கலந்து கொள்வது சிறப்பு. குறிப்பாக இரவு 11.30 மணி முதல் 12.30மணிவரை இடம்பெறும் லிங்கோற்பவ காலப் பூஜையில் கலந்து கொள்வது ஒவ்வொரு இந்து மக்களின் கடமைகளில் ஒன்றாகவும்
சொல்லப்படுகின்றது.

நள்ளிரவு வேளையான இலிங்கோற்பவ காலத்தில் வில்வம் இலைகளால் அர்ச்சனை செய்வது பெரும் ஆன்மீக ஈடேற்றத்தை தரும். இதைத்தான் ‘திரிஜென்ம பாவசங்காரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்பது ஆன்றோர் கூற்று.

இந்த மஹா சிவராத்திரி தினத்தில் சிவாலயம் சென்று பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகின்றது.

நாம் மனமுருக சிவனிடம் வேண்டினால் நிச்சயம் எம்பெருமான் எமக்கு நிறைவற்ற அருளையும் குறைவற்ற செல்வத்தையும் வாரி வழங்குவார் என்பது சித்தர்கள் முனிவர்களது பொய்யா மொழி ஆகும்.

Post a Comment

0 Comments